search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு- திண்டுக்கல்லில் 10 குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிப்பு
    X

    மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு- திண்டுக்கல்லில் 10 குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிப்பு

    திண்டுக்கல்லில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்த வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் ஆத்தூர் காமராசர் அணை மூலம் பெறப்படும் தண்ணீரைக் கொண்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

    பல இடங்களில் மழை பெய்த போதும் திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நகர மக்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால் அதிலும் பேரிடியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் போது கரூர் மாவட்டம் நெரூர் பகுதியில் உள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பகுதியில் வெள்ளத்தில் மோட்டார் அடித்து செல்லப்பட்டது.

    இதனால் காவிரி கூட்டுக் குடிநீர் மூலமும் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது 20 நாட்களுக்கு மேல் ஆகியும் பல பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் திண்டுக்கல் மக்கள் விலைக்கு வாங்கி தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.

    மேல்நிலை தொட்டிகளில் இருக்கும் குறைந்த அளவு தண்ணீர் வார்டு வாரியாக பிரித்து அனுப்பும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த அளவு தண்ணீரே வினியோகம் செய்யப்படுவதால் 1 மணி நேரம் கூட முழுமையாக தண்ணீர் வினியோகம் செய்ய முடியவில்லை.

    இதனால் பல வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. பல வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும் புகார்கள் வந்தது. நேற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டபோது மாநகராட்சி பொறியாளர் மனோகர் உத்தரவின் பேரில் பொறியாளர்கள் மாரியப்பன், சாமிநாதன் தலைமையிலான அலுவலர்கள் குமரன் திருநகர், ஆண்டாள்நகர், ஜி.டி.என்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்த 10 வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், மாநக ராட்சியாக உள்ள திண்டுக்கல்லில் 20 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் வினியோகம் சீராக கிடைப்பதில்லை. தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் இது போன்ற நிலை இருக்காது. ஆனால் குடிநீர் வரி மட்டும் தவறாது வசூலித்து விடுகின்றனர். ஊராட்சி, பேரூராட்சிகளில் கூட தண்ணீர் கிடைக்கும் நிலையில் மாநகராட்சி அந்தஸ்து பெற்ற திண்டுக்கல்லுக்கு குடிநீர் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வினியோகம் செய்யும் போது மோட்டார் வைத்து எடுக்காவிடால் 10 குடங்கள் கூட கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே பெரும் பாலான வீடுகளில் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. பல வீடுகளுக்கு தண்ணீரும் முறையாக கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×