search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம் கிடைக்கும்
    X

    புதுவை அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம் கிடைக்கும்

    புதுவை அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு கணக்கு, கருவூல துறைக்கு இரவிலேயே அனுப்பப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் இன்று அல்லது நாளை சம்பளம் செலுத்தப்படுகிறது. #PondicherryGovtEmployees
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் நிதி ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய கவர்னர் கிரண் பேடி அனுமதி அளிக்கவில்லை.

    பட்ஜெட்டுக்கு அனுமதி அளிக்காத நிலையில் புதுவை சட்டசபை கடந்த 19-ந்தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட்டுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி நிபந்தனை விதித்திருந்தார்.

    சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பதா? இல்லையா? என்று முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சட்டசபையை கூட்டுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    சட்டசபையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றால் மட்டுமே நிதியை பயன்படுத்த முடியும். இதனால் அடுத்த மாத அரசின் செலவுகளுக்கு நிதியை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக புதுவை அரசு ஊழியர்களுக்கு மாதத்தின் இறுதி நாளில் சம்பளம் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.

    இந்த இக்கட்டான சூழலில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், நிதி துறை செயலாளர் சுந்தவேலு, பட்ஜெட் அதிகாரி ரவிசங்கர், கருவூல துறை இயக்குனர் ரமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

    ஆலோசனையின் முடிவில் அரசின் அவசர கால நிதியில் இருந்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து துறை வாரியாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    இதற்காக அரசு துறைகள் அலுவலகம் நேரம் முடிந்த பிறகும், இரவிலும் இயங்கின. பட்டியல் தயாரிக்கப்பட்டு கணக்கு மற்றும் கருவூல துறைக்கும் இரவிலேயே அனுப்பப்பட்டது.


    கருவூலக துறையிலும் அதிகாரிகளும், ஊழியர்களும் இரவிலும் பணியாற்றினர். இதன் பிறகு அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப்படும். இந்த பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைந்தது.

    இதனால் இன்று மாலையோ, அல்லது நாளையோ (புதன்கிழமை) அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும். #PondicherryGovtEmployees
    Next Story
    ×