search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் 750 தனியார் ஆஸ்பத்திரிகள் வேலை நிறுத்தம்
    X

    ஈரோடு மாவட்டத்தில் 750 தனியார் ஆஸ்பத்திரிகள் வேலை நிறுத்தம்

    தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதாவை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் 750 தனியார் ஆஸ்பத்திரிகளில் சுமார் 3 ஆயிரம் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதா இன்று (சனிக்கிழமை) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்த மசோதாவில் மக்களையும், மருத்துவ துறையையும் பாதிக்க கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதை கண்டித்து ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    இன்று தாக்கல் செய்யப்படும் மசோவை கண்டித்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை தேர்வு தலைவர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது.-

    இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு மத்திய அரசால் தேர்வு செய்யப்படும், 25 பேர் கொண்ட தேசிய மருத்துவ கமி‌ஷன் குழு அமைக்கப்படும்.

    இக்குழுவில் 5 டாக்டர்களும், மருத்துவத் துறையை சாராதவர்களும் இடம் பெறுவர். முன்புள்ள அமைப்பில், மாநிலத்துக்கு பலர் என மொத்தம் 300 பேர் உறுப்பினராக இருந்தனர். மருத்துவம் சாராதவர்கள் மருத்துவமனைகள், டாக்டர்கள், மருத்துவ கல்லூரிகளை கண்காணிப்பர் என்பது சாத்தியமற்றது.

    இது போன்ற குழுக்களால், தரமற்ற மருத்துவ கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கையில் தவறுகள், தரமற்ற மருத்துவர்கள் உருவாக வழிவகுக்கும்.

    அலோபதி மருத்துவர்கள் அல்லாத ஹோமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதிக் மருத்துவர்களுக்கு ஆறு மாத பயிற்சி வழங்கி அலோபதி சிகிச்சை வழங்க திட்டமிட்டுள்ளனர். இதனால் போலி மருத்துவர்கள் வருவாக வாய்ப்பு உள்ளது.

    மக்களுக்கான சிகிச்சையிலும் பிரச்சனை ஏற்படும். எனவே இந்த மசோதாவை கண்டித்து இன்று அகில இந்திய அளவில் ஒரு நாள் தனியார் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 750-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் பங்கேற்று உள்ளன. சுமார் 3 ஆயிரம் டாக்டர்கள் பணிக்கு செல்லவில்லை.

    இதனால் பல இடங்களில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனினும் அவசரக்கால அறுவை சிகிச்சைகள், மகப்பேறு சம்மந்தமான அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.

    தனியார் ஆஸ்பத்திரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வழக்கத்துக்கு மாறாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. #DoctorsStrike

    Next Story
    ×