search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோவாளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புது மாப்பிள்ளை பலி
    X

    தோவாளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புது மாப்பிள்ளை பலி

    தோவாளையில் மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதி 4 அடி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆரல்வாய்மொழி:

    ராஜாக்கமங்கலம் அருகே பழவிளை பூவன்குழியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் மணிபாரதி, (வயது 23). இவர், அந்த பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் திருமணம் நடக்கிறது. நேற்று காலை வேலைக்கு சென்ற மணிபாரதி இரவு தனது ஒர்க்ஷாப்பில் வேலை பார்க்கும் தர்மபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குமாரபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    மோட்டார் சைக்கிளை மணிபாரதி ஓட்டினார். பிரபாகரன் பின்னால் அமர்ந்திருந்தார். தோவாளை அருகே விசுவாசபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மணிபாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் கரை பகுதியில் 4 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

    இதில், மணிபாரதியின் தலை பாலத்தில் பலமாக இடித்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரபாகரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து படை போலீசாரும், ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த மணிபாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மணிபாரதி பலியான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணவாளக்குறிச்சி படர்நிலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளை மணவாளக்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றின் கதவை டிரைவர் ரமேஷ் திறந்தார்.

    எதிர்பாராத விதமாக சந்திரசேகர் அந்த வேன் கதவின் மீது மோதி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று சந்திரசேகர் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ஆட்டோ டிரைவர் செல்வக்குமார் நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×