search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் மீது பொய் வழக்கு- டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
    X

    பெண்கள் மீது பொய் வழக்கு- டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

    பெண்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
    சென்னை:

    கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நவேதிதா என்பவர் தனது நண்பர்கள் ஹரினி, சுமதி, ஷீலா உள்ளிட்டோர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று இருந்தார்.

    அவர்கள் அங்குள்ள ரீசார்ட்டில் இரண்டு அறைகள் எடுத்து தங்கி இருந்தனர். அப்போது டி.எஸ்.பி. மோகன்குமார், கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் அங்கு வந்தனர்.

    அறைகளில் இருந்த நிவேதிதா உள்பட பெண்களை ஓட்டலில் நடனம் ஆட வந்ததாக கூறி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இதுகுறித்து நிவேதிதா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அதில், நான், எனது தோழிகளுடன் கொடைகானலுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு பணியாற்றிய டி.எஸ்.பி. மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் எங்களை ஆபாச நடனம் ஆடவந்ததாக கூறி வெளியே இழுத்து வந்து தாக்கினர். நாங்கள் சுற்றுலாவுக்கு வந்து இருக்கிறோம் என்று கூறியும் கேட்கவில்லை. எங்களை டி.எஸ்.பி. அலுவலகம் வெளியே இரவு முழுவதும் அமர வைத்தனர்.

    விசாரணை என்ற பெயரில் அவதூறாக பேசி அத்துமீறி நடந்து கொண்டனர். பெண்களிடம் விசாரணை நடத்தும்போது பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும் என்று விதி உள்ளது.

    ஆனால், அதுபோன்று பெண் போலீசார் யாரும் இல்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த போதும் அதை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர். ரூ.7 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் விடுவித்து விடுவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். நாங்கள் பணம் கொடுக்க மறுத்ததால் எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவர்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்தில் வழங்கி விட்டு போலீஸ் அதிகாரிகள் இருவரின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
    Next Story
    ×