search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய திருவிழா 27-ந்தேதி தொடங்குகிறது
    X

    கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய திருவிழா 27-ந்தேதி தொடங்குகிறது

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் திருத்தலங்களில் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா திருத்தல பேராலய திருவிழா வருகிற 27-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் திருத்தலங்களில் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா திருத்தல பேராலய திருத்தலமும் ஒன்றாகும். தென்னிந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் மிக உயர்ந்த வானளாவிய கோபுரம் கொண்டதாக அமைந்துள்ளது பனிமாதா அன்னையின் ஆலயம். இத்திருத்தல பேராலய திருவிழா வருகிற 27-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை ரெமிஜியூஸ் ஜெபம் செய்து அர்ச்சித்த பின்னர் கோவில் தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து மதுரை மறைமாநிலம் ஆனந்தம் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 2-ந் தேதி 7ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், 8.30 மணிக்கு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. மாலை6.30 மணிக்கு அலங்காரதட்டு பங்குதந்தை ஜான் செல்வம் தலைமையில் சிறப்பு ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது.

    3-ந் தேதி 8ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் மறைமாவட்ட வடவை முதன்மை குரு ஜான் பிரிட்டோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு பி‌ஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் நற்கருணை பவனி நடைபெறுகிறது. கோட்டார் இளைஞர் இயக்குநர் ஜெனிபர் எடிசன் அடிகளார் மறையுரை நற்கருணை ஆசீர்வாதம் வழங்குகிறார்.

    ஆகஸ்ட் 4-ந் தேதி 9ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 7 மணிக்கு தக்கலை மேதகு பேராயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. அடைக்கலாபுரம் ஜோசப் இசிதோர் மறையுரையும், அதனைத் தொடர்ந்து வானவேடிக்கையும் இரவு 12 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள். ஆகஸ்ட் 5ம் தேதி 10ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு தக்கலை மேதகு பேராயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி மற்றும் 8.30 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெறுகிறது.

    பின்னர் இரவு மாலை ஆராதனையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.ஜெபஸ்டின்ஆனந்த், பங்குதந்தை ஜான்சன்ராஜ், உதவி பங்குதந்தை கலைச்செல்வன் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகைமை சங்கம்,நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இறைமக்கள் செய்துவருகின்றனர்.
    Next Story
    ×