search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் பிளாஸ்டிக்கிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் - அமைச்சர் கந்தசாமி
    X

    புதுவையில் பிளாஸ்டிக்கிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் - அமைச்சர் கந்தசாமி

    புதுவையில் பிளாஸ்டிக்கிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். #MinisterKandasamy

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் பேசியாதவது:-

    உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

    உலகில் பல நாடுகள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றான பொருட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். நம் நாட்டிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் பல மாநிலங்களில் பிளாஸ்டிக்கிற்கு தடை கொண்டுவந்துள்ளதோடு, அந்த தடையை முழுமையாக அமல்படுத்தி வருகின்றனர். தமிழக அரசும் வரும் ஜனவரி வரை காலக்கெடு அளித்து பிளாஸ்டிக் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் புதுவையில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக எந்தவித முன்னேற்பாடோ, நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை.

    மழை காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் கால்வாய்களை அடைத்துக்கொள்வதால் பலவித இன்னல்கள் ஏற்படுகிறது. கழிவுநீர் ரோட்டில் கலந்துவிடுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் கடலும் மாசுபடுகிறது.

    சிறிய மாநிலமான புதுவையில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது மிகவும் எளிதான காரியம். எனவே புதுவை மாநிலத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் கந்தசாமி பேசும் போது, கடந்த 5 மாதத்திற்கு முன்பே முதல்-அமைச்சருடன் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது மாற்று ஏற்பாடுகளை செய்து கொண்டு பிளாஸ்டிக்கை தடை செய்வது என முடிவெடுத்தோம்.

    பிளாஸ்டிக் பொருட்களால் ஏரி, குளம், கடல் போன்ற நீர்நிலைகள் மாசுபடுகிறது. எனவே புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்வோம். விரைவில் பிளாஸ்டிக் தடைக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

    வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், புதுவையில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களையும் தடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×