search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
    X

    கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

    கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
    கரூர்:

    ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். கரூர் மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோன்றிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஊராட்சி வளர்ச்சி பிரிவு, மாவட்ட ஊராட்சி தணிக்கை பிரிவு ஆகிய பிரிவுகளில் உள்ள 534 பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 100 நாள் வேலை திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டும் பணி உள்பட துறைரீதியான அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

    கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்பட்டால் போராட்டம் வாபஸ் பெறப்படும் என சங்க வட்டாரத்தில் தெரிவித்தனர். மேலும் சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர். 
    Next Story
    ×