search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சட்டசபையில் ஜூலை 2-ந் தேதி பட்ஜெட் தாக்கல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
    X

    புதுவை சட்டசபையில் ஜூலை 2-ந் தேதி பட்ஜெட் தாக்கல் - அதிகாரபூர்வ அறிவிப்பு

    புதுவை சட்டசபையில் வருகிற 2-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. #PondicherryBudget #PondicherryAssembly

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி கூடியது. அன்று புதுவை அரசின் திட்டக்குழு கூடி 2018-2019-ம் ஆண்டுக்கான புதுவை மாநிலத்துக்கான ரூ.7530 கோடிக்கான திட்ட வரையரையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

    ஆனால், மத்திய அரசிடம் இருந்து இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த 5-ந் தேதி சட்டசபை கூட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

     


    இதன் பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இதையடுத்து கடந்த 19-ந் தேதி மத்திய அரசு புதுவை பட்ஜெட்டுக்கு அனுமதி அளித்தது.

    இதையடுத்து புதுவை சட்டசபை அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி மீண்டும் கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    புதுவை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் சட்டசபை 2-ந் தேதி கூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

    அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்- அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து பட்ஜெட்கூட்டத் தொடர் ஜூலை மாதம் முழுவதும் நடைபெறும் என்று தெரிகிறது. #PondicherryBudget #PondicherryAssembly

    Next Story
    ×