search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தியால்பேட்டையில் பட்டதாரி வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 5 பேர் கைது
    X

    முத்தியால்பேட்டையில் பட்டதாரி வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 5 பேர் கைது

    முத்தியால்பேட்டையில் பட்டதாரி வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சாமிபிள்ளை தோட்டம் வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பார்த்திபன் (வயது 21). பி.காம். பட்டதாரியான இவர், முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு பார்த்திபன் முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழிமறித்தது. கொலை வெறியுடன் வந்த அவர்களை பார்த்ததும் பார்த்திபன் தப்பி ஓட முயன்றார்.

    ஆனால், அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி பார்த்திபனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் அவர் இறந்து விட்டதாக கருதி அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டது.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த சம்பவத்தை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

    இதையடுத்து தகவல் அறிந்ததும் முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பார்த்திபனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பார்த்திபனை வெட்டிக்கொல்ல முயன்றது கருவடிகுப்பத்தை சேர்ந்த ஹரி மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் என்பது தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் ஹரிக்கும், பார்த்திபனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் அவர்களிடையே பெண் தகராறும் இருந்து வந்துள்ளது.

    இதனால் பார்த்திபனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஹரி நேற்று இரவு தனது நண்பர்களான மோகன், சிரஞ்சீவி உள்பட 4 பேரை அழைத்து சென்று பார்த்திபனை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து ஹரி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×