search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காடுவெட்டி குரு உடல் அடக்கம் - அரியலூரில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு, பஸ்கள் ஓடவில்லை
    X

    காடுவெட்டி குரு உடல் அடக்கம் - அரியலூரில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு, பஸ்கள் ஓடவில்லை

    காடுவெட்டி குரு மரணம் அடைந்ததையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டும், பேருந்துகளும் ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். KaduvettiGuru
    ஜெயங்கொண்டம்:

    காடுவெட்டி குரு மரணமடைந்ததையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டும், பேருந்துகளும் ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். KaduvettiGuru

    வன்னியர் சங்க தலைவர் குரு மரணமடைந்ததை தொடர்ந்து, அவருடைய உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    இந்நிலையில் குரு மரணமடைந்ததையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. ஜெயங்கொண்டம் செந்துறை பிரிவு ரோட்டில் உள்ள அரசு பணிமனைக்கு சென்ற 3 அரசு பஸ்களை வழிமறித்த மர்மநபர்கள் பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பி ஓடினர்.

    இதேபோல் காட்டுமன்னார்குடியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த அரசு பஸ்சை பொன்னேரியிலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சை கல்லாத்தூரிலும் வழிமறித்த மர்ம நபர்கள் கண்ணாடிகளை உடைத்து விட்டு சென்றனர். திருச்சி-சிதம்பரம் சாலையில் சூரியமணலில் ஒரு பஸ்சின் கண்ணாடியையும், ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டி அருகே 2 பஸ்களின் கண்ணாடியையும், வாரியங்காவலில் ஒரு பஸ்சின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் உடைத்தனர்.

    ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி பஸ் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அரியலூரிலும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. இன்று (ஞாயிற்றுக் கிழமை) முகூர்த்த நாள் என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவதற்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆண்டிமடம் கடைவீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் போலீசாரால் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பிகளை எடுத்து சாலையின் குறுக்கே போட்டு, அதன்மேல் டயர்களை போட்டு எரித்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் அந்த கும்பலை எச்சரித்தனர்.

    ஆனாலும் அந்த கும்பல் போலீசாரை கண்டுகொள்ளாமல் 4 ரோடு சந்திப்பு மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ரோட்டில் உள்ள போலீஸ் கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தது. அங்கிருந்து அண்ணாசிலை வரை உள்ள வணிக வளாகங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது.

    தனியார் கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், டீக்கடை பெஞ்ச், தள்ளுவண்டி போன்ற பொருட்களை உடைத்தும், உடைத்த பொருட்களை நடுரோட்டில் போட்டும் எரித்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக கனரக, இலகுரக வாகனங்கள், செல்லவில்லை. மேலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவங்களால் ஆண்டிமடம் பகுதி கலவர பூமி போல் காட்சியளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டிமடம் நாட்டார் தெருவை சேர்ந்த செல்வம் (வயது 35), சூரக்குழி கிராமத்தை சேர்ந்த சரவணகுமார்( 28), அருள்பிரகாசம் (32), சிவகுமார் (30), ஜான்விக்டர் (31), கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (33), பார்த்திபன் (34), பிரகாஷ் (29), மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (35) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


    இந்தநிலையில் ஜெ. குருவின் உடல் இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, தா.பழுர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன.

    ஜெயங்கொண்டம் பகுதியில் முற்றிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 13 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் அரியலூர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடு பட்டு வருகின்றனர். #KaduvettiGuru
    Next Story
    ×