என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூட்டை கண்டித்து இளைஞர்கள்-மாணவர்கள் மறியல்
    X

    துப்பாக்கி சூட்டை கண்டித்து இளைஞர்கள்-மாணவர்கள் மறியல்

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து திருவள்ளூர் அருகே இளைஞர்கள்-மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியானார்கள். இதனை கண்டித்தும் துப்பாக்கி சூட்டுக்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் மாணவர்கள், இளைஞர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென திரண்டனர்.

    அவர்கள் சென்னையில் இருந்து வந்த 2 மின்சார ரெயில்களை மறித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×