search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாசாலை வழித்தடத்தில் முதல் சுரங்க ரெயில்:  சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே விரைவில் இயக்கம்
    X

    அண்ணாசாலை வழித்தடத்தில் முதல் சுரங்க ரெயில்: சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே விரைவில் இயக்கம்

    அண்ணாசாலை வழித்தடத்தில் முதல் முறையாக மெட்ரோ சுரங்க ரெயில் சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே விரைவில் இயக்கப்பட உள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு -ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை தற்போது நடந்து வருகிறது.

    பயணிகள், பொது மக்களிடையே மெட்ரோ ரெயிலுக்கு மவுசு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது.

    நேரு பூங்கா - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரையில் சுரங்க வழித்தடத்தில் பணிகள் முடிவடைந்ததையொட்டி மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகர் தலைமையிலான பாதுகாப்பு குழுவினரின் ஆய்வு பணிகள் நடந்தது.

    சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே டிராலியில் சென்று பாதுகாப்பு குழுவினர் மெட்ரோ வழித்தட பாதைகளை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து 80 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி ஆய்வு நடத்தினர். ஆய்வு பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

    இதையொட்டி பாதுகாப்பு கமி‌ஷனர் அனுமதி அளித்ததும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை இயக்கம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் மெட்ரோ ரெயில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல நேரு பூங்கா - சென்ட்ரல் வழித்தடத்திலும் இம்மாத இறுதியில் ஒரே நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

    அண்ணாசாலை வழித்தடத்தில் முதல் முறையாக மெட்ரோ சுரங்க ரெயில் விரைவில் இயக்கப்பட உள்ளதையொட்டி பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தேனாம்பேட்டை டி.எம்.எஸ். ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு இனிமேல் நேரடியாக பயணிகள் செல்ல முடியும்.

    அதேபோல சென்ட்ரலில் இருந்து எழும்பூர் வழியாக விமான நிலையத்துக்கு நேரடியாக பயணிகள் செல்லலாம். #MetroTrain
    Next Story
    ×