என் மலர்
செய்திகள்

சாலையை கடக்க முயன்றவர் மீது வாகனங்கள் மோதியதில் உடல் சிதைந்து பலி
பாகூர்:
கன்னியகோவில் அருகே முள்ளோடையில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் எதிரே இன்று அதிகாலை 5 மணியளவில் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் புதுவை- கடலூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் மீது அடுத்தடுத்து வந்த வாகனங்களும் மோதின. இதில் முகமே அடையாளம் தெரியாத வகையில் அவர் உடல் சிதறி போனது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிதறி கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வாகனங்கள் மோதி இறந்தவர் கடலூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இதையடுத்து கடலூர், நெல்லிக்குப்பம் பண்ருட்டி, போலீசாருக்கு கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.






