search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடங்கள் வரும் கல்வியாண்டில் நிரப்பப்படும் - துணைவேந்தர் தகவல்
    X

    சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடங்கள் வரும் கல்வியாண்டில் நிரப்பப்படும் - துணைவேந்தர் தகவல்

    சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் வரும் கல்வியாண்டில் நிரப்பப்படும் என துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.துரைசாமி தலைமை தாங்கினார். இதில் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் உள்பட செனட் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வரும் கல்வி ஆண்டு முதல் தொலை தூர கல்வியில் பி.எட். படிப்பு மீண்டும் தொடங்குவதற்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கான, கல்வி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து, ரூ.9 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. செய்முறை கட்டணமானது ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    நிரந்தர இணைப்பு அங்கீகார கட்டணத்தை ரூ.5 லட்சத்தில் இருந்து, ரூ.10 லட்சமாக அதிகரித்தும் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், தன்னாட்சி கல்லூரிகள் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணமாக இதுவரை 3 ஆண்டுகளுக்கு ரூ.250 மட்டுமே கட்டி வந்த நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் தன்னாட்சி கல்லூரிகளும், சுயநிதி கல்லூரிகளை போன்று சான்றிதழ் பாதுகாப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

    அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் தனியார், சுயநிதி, தன்னாட்சி கல்லூரிகளில் படிக்கும் இளங்கலை பட்டதாரிகள் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணமாக ஆண்டுக்கு 600 ரூபாயும், முதுநிலை பட்டதாரிகள் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணமாக ஆண்டுக்கு ஆயிரம் ரூபாயும், எம்.பில். பட்டதாரிகள் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணமாக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரமும் செலுத்த வேண்டும் என ஒப்புதல் பெறப்பட்டது.

    இதற்கு செனட் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். செனட் உறுப்பினர், பேராசிரியர் மணிவாசகன் பேசும்போது, “சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிறரிடம் கேட்டுதான் தெரிந்து கொள்ள முடிகிறது. அதனால் கூட்டத்தின் தீர்மானங்களை உறுப்பினர்கள் மட்டும் பார்க்கும் வகையில் இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும்” என்றார். அதற்கு துணைவேந்தர் பி.துரைசாமி, “சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு அனுப்பப்படுகிறது” என்று பதில் அளித்தார். அதற்கு மணிவாசகன், “தனக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை” என தெரிவித்தார்.

    பேராசிரியர் கருணாநிதி பேசும்போது, “கிண்டி, தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகங்களில் ஓய்வுபெற்ற துறை தலைவர்களின் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது” என்றார். அதற்கு பதில் அளித்த துணைவேந்தர் பி.துரைசாமி “இதுவரை பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை இருந்து வந்தது. தற்போது அந்த தடை விலகி விட்டது. எனவே, வரும் கல்வியாண்டில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் போன்ற பெரும்பாலான காலியிடங்கள் நிரப்பப்படும்” என்று கூறினார்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் 6 சிண்டிகேட் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நேற்று நடைபெற்றது. 
    Next Story
    ×