search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளையில் கல்லூரி முதல்வர் வீட்டில் கொள்ளை - சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்யும் போலீசார்
    X

    பாளையில் கல்லூரி முதல்வர் வீட்டில் கொள்ளை - சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்யும் போலீசார்

    பாளையில் தனியார் கல்லூரி முதல்வர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த மர்மநபர்ளை அறிய போலீசார் அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
    நெல்லை:

    பாளை பெருமாள்புரம் 7-வது தெருவை சேர்ந்தவர் சத்திய நேசகுமார் (வயது52). இவர் தூத்துக்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி முதல்வராக வேலை பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிமி (45). இவர்களது பிள்ளைகள் வெளியூரில் படித்து வருகிறார்கள்.

    நேற்று இவர்களது வீட்டுக்கு சிமியின் சகோதரி வந்திருந்தார். அவரை வழியனுப்புவதற்காக நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு சத்தியநேசகுமாரும், அவரது மனைவி சிமியும் காரில் அழைத்து சென்றனர்.

    அப்போது அவர்கள் உடனே வீடு திரும்ப வேண்டும் என்பதால் அனைத்து கதவுகளையும் பூட்டாமல் உள்பக்க கதவுகளை மட்டும் பூட்டி விட்டு வெளி கதவுகளை வீட்டில் ஆட்கள் இருப்பது போல பூட்டாமல் வைத்திருந்தனர்.

    இரவு 9.15 மணிக்கு சென்று விட்டு 10.15 மணிக்கு வீட்டுக்கு திரும்பினர். அப்போது அவர்கள் வீட்டின் உள்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவையும் உடைத்து அதிலிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    மொத்தம் 200 பவுன் தங்க நகைகளில் பலவற்றை வெவ்வேறு பகுதிகளில் பிரித்து வைத்து இருந்ததால் ஏராளமான நகைகள் தப்பின. 40 பவுன் தங்க நகைகளும், ரூ.20 ஆயிரம் ரொக்கபணமும் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சத்திய நேச குமார் பாளை குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். வீட்டில் பதிவான அனைத்து கைரேகைகளும் பதிவு செய்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் கொள்ளையர்களின் கைரேகைகளும் பதிவானதாக கூறப்படுகிறது. கொள்ளை சம்பவம் ஒரு மணி நேரத்தில் நடந்துள்ளதால் கொள்ளையர்கள் அந்த பகுதிக்கு முன்கூட்டியே வந்து இருக்கலாம் என்றும் அவர்கள் அந்த பகுதியில் சுற்றி வரும் போது அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனால் போலீசார் அந்த பகுதியில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் சந்தேகப்படும்படி சி.சி.டி.வி. காமிராவில் பதிவான வாகன எண்களை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×