search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்-அப் மூலம் லாட்டரி விற்ற வாலிபர் கைது
    X

    வாட்ஸ்-அப் மூலம் லாட்டரி விற்ற வாலிபர் கைது

    திருவாண்டார்கோவிலில் வாட்ஸ்-அப் மூலம் லாட்டரி விற்ற வாலிபரை பொறிவைத்து பிடித்தனர்.
    திருபுவனை:

    புதுவையில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் 3 நம்பர் லாட்டரி மறைமுகமாக விற்கப்பட்டு இருந்தது. இதன்மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. அனில்குமார்கவுதம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவாண்டார்கோவிலில் நூதன முறையில் வாட்ஸ்-அப் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் குற்றப்பிரிவு போலீஸ்காரர் மலைராஜா ஆகியோர் திருவாண்டார்கோவில் 4 முனை சந்திப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் 2 செல்போன்களை கையில் வைத்து கொண்டு ஒரு செல்போனில் வரும் தகவல்களை மற்றொரு செல்போன் மூலம் பறிமாறி கொண்டு இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து செல்போன்களை வாங்கி ஆய்வு செய்தனர்.

    அப்போது கேரளாவில் இருந்து வாட்ஸ்-அப் மூலம் 3 நம்பர் லாட்டரி முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு அந்த வாலிபர் தெரிவித்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (வயது37) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து செல்வத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 2 செல்போன்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை பணம் ரூ.2820 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×