என் மலர்
செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு: கிராமமக்கள் உண்ணாவிரதம்
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். தெரு மலை மேடு பகுதியில் ஆண்டிமடம் செல்லும் சாலையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 30 வருடங்களாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
மலைமேடு பகுதியில் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தாசில்தார் அலுவலகத்துக்கான புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. எனவே இங்கிருந்து வீடுகளை காலி செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்களிடம் தாசில்தார் கூறினார். அதற்கான நோட்டீசும் அவர்களிடம் வழங்கப்பட்டது. ஆனால் மலைமேடு பொதுமக்கள் வீடுகளை காலி செய்யவில்லை.
இந்த நிலையில் அதிகாரிகள் மலைமேடு பகுதிக்கு நேற்று வந்தனர். நீங்கள் இன்னும் சில நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் வரும் 25-ந் தேதி வீட்டில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். வீடுகளும் இடிக்கப்படும் என அந்த பகுதி மக்களை அதிகாரிகள் எச்சரித்து விட்டு சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் ஆண்டிமடம் செல்லும் சாலையில் மாதா கோவில் முன்பு இன்று காலை திரண்டனர்.
வீடுகளை காலி செய்ய கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையோரம் தரையில் அமர்ந்து தொடர் உண்ணாவிரதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து போராட்டம் செய்தனர். பல்வேறு கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது,
எங்களை திடீரென வீடுகளை காலி செய்ய சொன்னால் எங்கு செல்வோம். எங்களிடம் சேத்தாம்பட்டு ஊராட்சியில் இடம் தருவதாக அதிகாரிகள் கூறினர். அங்கு சென்றால் ஸ்ரீமுஷ்ணத்தில் படிக்கும் மாணவர்கள் கடும் பாதிப்பு அடைவர். மேலும் குடும்ப அட்டையை அங்கு மாற்றுவதில் சிரமம் ஏற்படும். எனவே ஸ்ரீமுஷ்ணம் நகர் பகுதியில் இடம் கொடுத்து அங்கேயே எங்களுக்கு பசுமை வீடுகள் கட்டி தர வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மாட்டோம். தொடர்ந்து ஈடுபடுவோம் என்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






