என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய வாலிபர் கைது
மயிலாடுதுறை:
புதுச்சேரி மாநிலம் வில்லியநல்லூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த முகமதுகனி மகன் ஷாகுல்அமீது (வயது 26). இவர், மயிலாடுதுறை மாருதி நகரில், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஷாகுல்அமீது, காற்றுக்காக வீட்டின் முன்பு உள்ள கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போன், ரூ.18 ஆயிரம் ஆகியவை திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு வாலிபர் மதுகுடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மயிலாடுதுறை அருகே அகரவல்லம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அருண்குமார் (26) என்பதும், அவர் ஷாகுல்அமீது வீட்டில் நுழைந்து செல்போன் மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.






