என் மலர்
செய்திகள்

பவானி அருகே வறட்சி காரணமாக விஷம் குடித்து விவசாயி தற்கொலை
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சன்னியாசிபட்டி, கூத்தம்பட்டி, கவுண்டர்வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது60). விவசாய கூலி தொழிலாளி.
தற்போது மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவுவதால் மாரியப்பனால் விவசாயம் செய்ய முடியாமல் இருந்தார். விவசாய வேலை எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் அவர் வங்கிகளிலும் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. வறட்சியால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் எதிர்பார்த்தபடி சாகுபடி செய்ய முடிவில்லை. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார்.
மேலும் மாரியப்பன் மகனுக்கு இன்னமும் திருமணம் ஆகிவில்லை. இதனால் கடனை எப்படி அடைப்பது? மகனுக்கு எப்படி திருமணம் நடத்தி வைப்பது என்று கடந்த சில நாட்களாக மாரியப்பன் மனவேதனையில் இருந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரியப்பன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






