என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்போரூர் அருகே புதிய மதுக்கடையை பெண்கள் இடித்து தள்ளினர்
    X

    திருப்போரூர் அருகே புதிய மதுக்கடையை பெண்கள் இடித்து தள்ளினர்

    திருப்போரூர் அருகே புதிய மதுக்கடை கட்டிடத்தை பொதுமக்கள் இடித்து தள்ளிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
    திருப்போரூர்:

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன.

    மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக குடியிருப்பு பகுதிகளில் புதிய மதுக்கடைகள் திறக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல இடங்களில் பெண்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

    நேற்று முன்தினம் திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை போலீஸ் அதிகாரி தாக்கிய சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் திருப்போரூர் அருகே புதிதாக கட்டப்பட்ட மதுக்கடையை இடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போரூரை அடுத்த ஆலத்தூரில் இருந்த மதுக் கடை கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதையடுத்து சிறுதாவூர் சாலை, ஏரிக்கரை அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதிய மதுக்கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான கட்டுமான பணியும் நடந்தது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். இதனால் கடந்த சில நாட்களாக கட்டுமான பணி நடைபெறாமல் இருந்தது.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மீண்டும் கட்டுமான நடைபெற்றது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆலத்தூர் பகுதி மக்கள், பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கடப்பாரை, சுத்தியல், இரும்பு கம்பியுடன் அங்கு திரண்டனர்.

    அவர்கள், புதிய மதுக்கடை கட்டிடத்தை இடித்து தள்ளினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது.

    தகவல் அறிந்ததும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். ஆனால் சமாதானத்தை ஏற்காமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திடீரென பொதுமக்கள் சிறுதாவூர் சாலையில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “புதிய மதுக்கடை திறந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மது போதையில் வாகனம் ஓட்டி செல்பவர்களால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படும். மேலும் இந்த பகுதியில் ஊராட்சி குடிநீர் கிணறு உள்ளது. அதில் கழிவுகள் கொட்டப்பட்டால் குடிநீர் ஆதாரம் பாதிக்கும். எங்களுக்கு மதுக்கடை வேண்டாம். இதற்காக நாங்கள் போராட தயாராக உள்ளோம். மதுக்கடையை அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.
    Next Story
    ×