search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய மதுபான கடையை திறக்கவிடாமல் பொதுமக்கள் முற்றுகை
    X

    புதிய மதுபான கடையை திறக்கவிடாமல் பொதுமக்கள் முற்றுகை

    காணியாளம்பட்டி- லந்தகோட்டை சாலையில் புதிய மதுபான கடையை திறக்கவிடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்வதாக கூறி போலீசார் வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வெள்ளியணை:

    கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி மெயின்ரோட்டில் செயல்பட்டு வந்த மதுபான கடை உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி மூடப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி மெயின் சாலையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தள்ளி காணியாளம்பட்டி- லந்தகோட்டை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடை திறப்பதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டதை அடுத்து ஊழியர்கள் நேற்று பகல் 12 மணிக்கு கடையை திறப்பதற்காக சென்றனர். ஆனால் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு ஊழியர்களை கடையை திறக்கவிடாமல் தடுத்தனர்.

    இதையடுத்து ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மாயனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தாங்கள் இந்த பகுதியில் விவசாய நிலங்கள் வைத்துள்ளதாகவும், விவசாய வேலைக்காகவும், ஆடு, மாடுகள் மேய்ப்பதற்கும், இங்கு வரும்போது பல்வேறு பகுதிகளில் இருந்து இக்கடைக்கு வருபவர்கள் மூலம் இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இதனால் தங்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது என்பதை சுட்டிக்காட்டி கடந்த மாதம் மார்ச் 27-ந் தேதி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தபோது, இப்பகுதிக்கு மதுபான கடை வராது என அதிகாரிகள் கூறினர். ஆனால் தற்போது கடையை திறக்க முயல்கின்றனர். இதை ஏற்று கொள்ளமாட்டோம் என்று கூறினர்.

    இதனால் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. மாலை 4 மணி வரை அதிகாரிகள் யாரும் வராததால் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை போலீசார் முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டவர் களை கைது செய்வதாக கூறி வேனில் ஏற்றினர். பின்னர் அவர்களை காணியாளம்பட்டியில் இறக்கிவிட்டனர். அப்போது போலீசார் கூறுகையில், நீங்கள் உங்களது கோரிக்கை குறித்து நாளை (இன்று) மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் மனுவாக கொடுங்கள். இனிமேல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடாதீர்கள் என்று கூறினர். இதனை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட மதுபான கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×