search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியங்குடி அருகே கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் சாலையோரம் வீச்சு
    X

    புளியங்குடி அருகே கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் சாலையோரம் வீச்சு

    புளியங்குடி அருகே சாலையோரத்தில் கேரளாவில் இருந்து வாகனங்களில் மருத்துவகழிவுகளை ஏற்றி வந்து கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    புளியங்குடி:

    கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வரும் லாரி, மினி லாரி, லோடு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கோழிக்கழிவுகள், மருத்துவ கழிவுகள் ஏற்றி வரப்பட்டு தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள புளியரை மற்றும் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் கடந்த சில மாதங்களாக கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த கழிவுகள் இங்கு கொட்டப்படுவதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

    இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சில நேரங்களில் கேரளாவில் இருந்து வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு சாலையோரங்களில் கொட்டப்படும் போது அங்கு பொதுமக்கள் திரண்டு வந்து வாகனங்களை சிறைபிடித்தும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து சாலையோரங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததாலும் தற்போது செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுவது குறைந்துள்ளது.

    இந்நிலையில் புளியங்குடி- கடையநல்லூர் சாலையில் உள்ள சிங்கிலிபட்டி என்ற இடத்தில் சாலையோரத்தில் கேரளாவில் இருந்து வாகனங்களில் மருத்துவகழிவுகளை ஏற்றி வந்து கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    நேற்று காலையில் இங்குள்ள சாலையோரத்தில் மருத்துவகழிவுகள் 4 மூட்டைகளில் கிடப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மூட்டைகளில் காலாவதியான மருந்து மாத்திரைகள், காலி மருந்து பாட்டில்கள் கிடந்தது. இந்த மூட்டைகளில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சவாரி செல்லும் டிரைவர்கள் மீண்டும் தமிழகத்திற்கு திரும்பும் போது பணத்துக்கு ஆசைப்பட்டு கோழிக்கழிவுகள் மற்றும் மருத்துவகழிவுகளை ஏற்றி வந்து தமிழக பகுதிகளில் கொட்டி விடுகின்றனர்.

    இது போன்ற கழிவுகள் கொட்டப்படுவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே கழிவுகளை கொட்டும் கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். 

    Next Story
    ×