search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் பெண்களிடம் செயின் பறித்த மராட்டிய கொள்ளையர்கள் கைது
    X

    ரெயிலில் பெண்களிடம் செயின் பறித்த மராட்டிய கொள்ளையர்கள் கைது

    சிக்னல் வயரை துண்டித்து கேரள எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்களிடம் நகையை பறித்த மராட்டிய கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    திருவனந்தபுரத்தில் இருந்து சேலம் வழியாக டெல்லிக்கு கேரள எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 3-ந்தேதி மாலை திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்த ரெயில் நள்ளிரவு 12 மணி அளவில் தர்மபுரி மொரப்பூர் அருகே உள்ள தொட்டம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது சிக்னல் கிடைக்காததால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    அப்போது ரெயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறிய 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கேரளாவை சேர்ந்த ரம்யா கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினை பறித்தனர். இதே போல வசந்தி ராமலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரிடமும் செயினை பறித்தனர்.

    17½ பவுன் நகைகள் மற்றும் பிரதீப்குமார் என்பவரின் மொபைல் போனை பறித்து சென்றனர்.

    சிக்னல் வயரை துண்டித்து வடமாநில கொள்ளையர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    கொள்ளையர்களை பிடிக்க சேலம் சந்திப்பு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் வட மாநிலங்களுக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    செல்போன் டவர்களில் பதிவான எண்களை வைத்தும் விசாரணை நடத்தினர். அப்போது மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    அங்கு விரைந்து சென்ற போலீசார் கொள்ளை கும்பலை சுற்றி வளைத்தனர். தான் கொள்ளை கும்பல் தலைவனாக செயல்பட்ட சுனில்போஸ்லே சிக்கினார். அவனது கூட்டாளியான அமர்காளேவையா தனிப்படை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் 2 பேரையும் கைது செய்த போலீசார் ரெயிலில் சேலத்துக்கு அழைத்து வந்தனர். ஜங்சன் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    2 பேரும் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட பல பகுதிகளில் இதே போல ரெயில் பயணிகளிடம் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.

    சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூரையை வெட்டி ரூ.6 கோடி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    அந்த கொள்ளை சம்பவத்திலும் இது வரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் அந்த கொள்ளையிலும் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
    Next Story
    ×