என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே மனைவியை அடித்துக்கொன்ற கணவன்
    X

    அரியலூர் அருகே மனைவியை அடித்துக்கொன்ற கணவன்

    அரியலூர் அருகே சமையல் செய்து வைக்காததால் மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை காலனி தெருவை சேர்ந்தவர் சுப்ரவேலு (வயது 42). இவரது மனைவி பழனியம்மாள் (40). இவர்களுக்கு தினேஷ் குமார் என்ற மகனும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர்.

    தினேஷ்குமார், ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். கலைவாணி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். கேரளாவில் கூலி வேலை செய்து வந்த சுப்ர வேலு, அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். நேற்று காலை சுப்ரவேலு வெளியில் சென்று விட்டார். பழனியம்மாள், தவசு குழி பகுதியில் உள்ள வயலுக்கு கரும்பு வெட்ட சென்றார். அப்போது வீட்டில் சமையல் செய்து வைக்காமல் சென்றார். இதனிடையே மதியம் வீட்டிற்கு வந்த சுப்ரவேலு, மனைவி சமையல் செய்து வைக்காமல் சென்றதால் ஆத்திரமடைந்தார்.

    இதையடுத்து தவசுக்குழிக்கு சென்ற அவர், அங்கு வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த பழனியம்மாளிடம் எப்படி சமையல் செய்து வைக்காமல் செல்வாய் என்று தட்டிக்கேட்டுள்ளார். மேலும் உடனே சமையல் செய்ய வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

    ஆனால் பழனியம்மாள் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்ரவேலு, அங்கு கிடந்த தென்னை மட்டையை எடுத்து பழனியம்மாள் தலையில் பின்புறம் தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    உடனே அவரை பொதுமக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பழனியம்மாள் இறந்தார்.

    இது குறித்து தினேஷ் குமார் ஆண்டிமடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சுப்ரவேலுவை வலைவீசி தேடி வருகின்றனர். மனைவியை கணவனே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×