search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 2 கிராமங்களுக்கு ஆதரவாக தீவிரமடையும் போராட்டம்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 2 கிராமங்களுக்கு ஆதரவாக தீவிரமடையும் போராட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லை, வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லை, வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் தினமும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கலந்து கொள்கின்றனர்.

    குறிப்பாக பெண்கள் பலர் பங்கேற்று வருகின்றனர். நல்லாண்டார் கொல்லையில் இன்று 31-வது நாளாகவும், வடகாட்டில் 14-வது நாளாகவும் போராட்டம் நீடிக்கிறது.

    போராட்டத்தில் பங்கேற்றுள்ள பொதுமக்கள் கூறியதாவது:-



    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவே இல்லை. நாங்கள் சாகுபடி செய்த கடலை பயிரை தற்போது அறுவடை செய்யும் காலம் இது. ஆனால் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தி வருவதால் அறுவடை பணி நடக்கவில்லை.

    போராட்டத்தில் விவசாயிகள், வியாபாரிகள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வதால் இப்பகுதியின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு தரப்பில் எந்தவித பதிலும் இல்லை.

    விளைநிலத்தையும், விவசாயத்தையும் பாதிக்கும் இத்திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிடும் வரையில் போராட்டம் தொடரும். இனி வரும் நாட்களில் எங்கள் போராட்டத்தின் தன்மை அதிகரிக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிடும் வரை யாருக்காகவும் எதற்காகவும் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.

    நல்லாண்டார் கொல்லையில் போராட்டம் தொடங்கி 30 நாள் ஆகியும் அரசு இது வரை தங்களது கோரிக்கையை கண்டுகொள்ளாத தால் 30-வது நாள் சடங்கு செய்வது போல் ஹைட்ரோ கார்பன் ஆய்வு ஆழ்துளை குழாயை சுற்றிலும் பானையில் தண்ணீரை வைத்து கொண்டு சுற்றி வந்து பானையை உடைத்தனர்.

    பெண்கள் தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டும் ஒப்பாரி வைத்தும் அழுதனர். இளைஞர்கள் தரையில் உருண்டு புரண்டு அழுது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோ‌ஷம் எழுப்பினர்.

    இது பற்றி அப்பகுதி பொது மக்கள் கூறும்போது, கடந்த மாதம் இங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அன்று முதல் எங்கள் குடும்பத்தை, குழந்தைகளையும், ஆடு மாடுகளையும் கவனிக்க முடியாமல் தவித்து வருகிறோம். ஏதோ வீட்டில் துக்கம் நடந்தது போல் அழுது புலம்பி கொண்டிருக்கிறோம்.

    ஆனால் மத்திய மாநில அரசுகள் மவுனமாகவே இருந்து வருகின்றன. எத் தனை நாட்கள் ஆனாலும் இத்திட்டத்தை கைவிடும் வரை எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். எங்கள் உயிரை கொடுத்தேனும் இத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்றனர்.
    Next Story
    ×