search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் 22-ந்தேதி நேரில் ஆஜராகிறார்
    X

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் 22-ந்தேதி நேரில் ஆஜராகிறார்

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வருகிற 22-ந்தேதி நேரில் ஆஜராவார் என ஐகோர்ட்டில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தகவல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலைக்கு பல வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு சொற்ப தொகையை சொத்து வரியாக சென்னை மாநகராட்சி நிர்ணயம் செய்துள்ளது. எனவே, இந்த சொத்து வரியை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘இந்த வழக்கு பொதுநல வழக்கின் தன்மையில் உள்ளதால், தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வின் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறேன். மேலும், வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலுவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுவதால், தகுந்த பாதுகாப்பினை சென்னை போலீஸ் கமி‌ஷனர் வழங்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு டிசம்பர் 2ந் தேதி உத்தரவிட்டார்.

    ஐகோர்ட்டின் உத்தரவின் படி மனுதாரர் பொன்.தங்கவேலுவுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

    அதில், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் நகலுடன், போலீஸ் கமி‌ஷனருக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவை அவர் வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சூரியபிரகாசம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, போலீஸ் கமி‌ஷனருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

    ‘ஐகோர்ட்டு உத்தரவிட்டு 3 மாதங்களாகியும் அதை போலீஸ் கமி‌ஷனர் அமல்படுத்தாமல் உள்ளார். போலீஸ் கமி‌ஷனரே உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், கீழ் நிலை அதிகாரிகள் எப்படி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு மதிப்பு கொடுப்பார்கள்? எனவே, இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும். அவர் நேரில் ஆஜராவாரா? அல்லது ஆஜராக உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா?’ என்று கோர்ட்டில் இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல், இதுகுறித்து கருத்து கேட்டு தெரிவிப்பதாக கூறினார். சிறிது நேரத்துக்கு பின்னர், ‘மனுதாரருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

    இதற்கு நீதிபதி, ‘ஐகோர்ட்டு என்ன பாவ பூமியா? கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி நேரில் ஆஜராகவேண்டும். அதன் படி ஆஜராவதில் போலீஸ் கமி‌ஷனருக்கு என்ன தயக்கம்? இதில் என்ன கவுரவப் பிரச்சனை உள்ளது? அவர் எப்போது ஆஜராவார்? என்பதை மட்டும் கேட்டு பிற்பகலில் தெரிவிக்க வேண்டும்’ என்று நீதிபதி மீண்டும் உத்தரவிட்டார்.

    இதன்படி நேற்று பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அட்வகேட் ஜெனரல் முத்து குமாரசாமி, 2 கூடுதல் அட்வ கேட் ஜெனரல்கள், கூடுதல் போலீஸ் கமி‌ஷனர்கள் தாமரைகண்ணன், சங்கர், இணை கமி‌ஷனர் அன்பு, 2 துணை கமி‌ஷனர்கள், 6 உதவி கமி‌ஷனர்கள் என்று போலீஸ் அதிகாரிகள் பலர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

    இதை பார்த்த நீதிபதி, ‘என்ன இத்தனை பேர் கோர்ட்டுக்கு வந்துள்ளீர்கள்? அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் என்று ஒரு கூட்டமே வந்துள்ளது?’ என்று கேள்வி எழுப்பினார்.


    அப்போது அட்வகேட் ஜெனரல், ‘இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்கிறோம்’ என்று கூறினார். இதை நீதிபதி ஏற்கவில்லை. ‘இது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு. ஒன்று போலீஸ் கமி‌ஷனர் நேரில் ஆஜராகவேண்டும். அல்லது அவர் நேரில் ஆஜராக சட்டப்படியான தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும். எப்போது அவர் நேரில் ஆஜராவார்? என்பதை மட்டும் சொல்லுங்கள் ’ என்று நீதிபதி கூறினார்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல், பதில் மனு தாக்கல் செய்வதாக மீண்டும் கூறினார்.

    இதையடுத்து நீதிபதி, ‘ஏன் அவர் ஆஜராக மாட்டார்? இது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு. போலீஸ் கமி‌ஷனர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும். இன்று, நாளை, நாளை மறுநாள் என்று 3 நாட்களுக்குள் ஆஜராக அவருக்கு எப்போது சவுகரியம்? என்று கேளுங்கள். இதுபோன்ற சூழ்நிலையில் கவுரவம் பார்க்கக் கூடாது’ என்று கூறினார்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘போலீஸ் கமி‌ஷனர் ஆஜராகும் நாளை உறுதிப்படுத்தி சில நிமிடங்களில் சொல்கிறேன்’ என்று கூறினார். ஆனால், நேற்று மாலை 4.30 மணி வரை அட்வகேட் ஜெனரல் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து நீதிபதி, அங்கிருந்த அரசு வக்கீலிடம், ‘அட்வகேட் ஜெனரல் எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை’ என்றார்.

    அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி, அதுகுறித்து விவரங்களை சிறிது நேரத்தில் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் நீதிமன்ற வேலை நேரம் முடிந்து, நீதிபதி தன்னுடைய சேம்பருக்கு சென்ற பின்னரும், எந்த தகவலையும் அட்வகேட் ஜெனரலிடம் இருந்து வரவில்லை.

    அதேநேரம், அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில் நேற்று மாலை ஏராளமான போலீஸ் அதிகாரிகள் குவிந்து இருந்தனர். அங்கு அவர்கள் தீவிர ஆலோசனை நடந்தினார்கள். பின்னர், அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு முதல் வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி, ‘கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் நேரில் ஆஜராகுவார்’ என்று கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருபாகரன், விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×