search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சினிமாவை தவிர மக்களுக்கு குஷ்பு செய்தது என்ன?: வானதி சீனிவாசன் ஆவேசம்
    X

    சினிமாவை தவிர மக்களுக்கு குஷ்பு செய்தது என்ன?: வானதி சீனிவாசன் ஆவேசம்

    தாம்பரம் தாண்டி தாமரையை தெரியாது என்று குஷ்பு விமர்சனம் செய்ததற்கு, பா.ஜனதா பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சினிமாவை தவிர்த்து மக்களுக்காக அவர் செய்திருக்கும் சேவைகள் என்ன? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
    சென்னை:

    தமிழக மக்களுக்கு குளத்து தாமரையைத்தான் தெரியும். பா.ஜனதாவின் தாமரையை தெரியாது. தாம்பரம் தாண்டி தாமரையை தெரியாது என்று நடிகை குஷ்பு சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தார்.

    இதற்கு பதில் அளித்து பா.ஜனதா பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

    தாம்பரம் தாண்டி தாமரையை தெரியாது என்று குஷ்பு விமர்சனம் செய்துள்ளார். சினிமாவில் எழுதிக் கொடுப்பதை மனப் பாடம் செய்து ஒப்பிப்பதை தவிர குஷ்புவுக்கு என்ன தெரியும். சினிமாவை தவிர்த்து மக்களுக்காக அவர் செய்திருக்கும் சேவைகள் என்ன? மக்களோடு மக்களாக சென்று மக்களுக்காக போராடினாரா?

    தேர்தலில் களம் காண பயப்படும் கைகள் தான் காங்கிரஸ். ஆனால் பா.ஜனதா தமிழகத்தில் வளர்ந்திருப்பதும் காங்கிரசை விட அதிகமான வாக்கு வாங்கி வைத்திருப்பதும் அவருக்கு எங்கே தெரியப்போகிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர்களின் கூட்டணி கட்சியான தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் போனதற்கு காரணம் பா.ஜனதாதான் என்பதும் குஷ்புவுக்கு எங்கே தெரியப்போகிறது. இதன் மூலம் அரசியலில் குஷ்பு எங்கே இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    தாமரையை குளத்தில் தான் பெண்கள் பார்க்கிறார்கள் என்று குஷ்பு கூறி இருக்கிறார். 60 ஆண்டு கால ஆட்சியில் குளம் குட்டையை தூர் வாரினீர்களா? எந்த குளத்தில் தண்ணீர் இருக்கிறது. தண்ணீர் இல்லாமல் மக்கள் கண்ணீர் விடுவது தான் மிச்சம்.


    பா.ஜனதா தாகம் தீர்க்கும் யாத்திரையால் கோவை உள்ளம்பாளையத்தில் வானதி சீனிவாசன் தலைமையில் தூர் வாரப்பட்ட குளம்.

    கோவையில் பா.ஜனதாவே தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்தி குளங்களை தூர் வாரி வருகிறது. உள்ளம் பாளையம் என்ற கிராமத்தில் 20 ஏக்கரில் தூர்ந்து கிடந்த குளத்தை பா.ஜனதாவினர் தூர் வாரினோம். 13 ஆண்டுகளுக்கு பிறகு மழையால் அந்த குளம் இப்போது நிரம்பியுள்ளது. இந்த குளத்திலும் இனி தாமரைகள் மலரும். மகிழ்ச்சியில் மக்கள் மனங்களிலும் தாமரை மலரும். குஷ்பு வேண்டுமானால் நேரில் வந்து பார்த்து செல்லட்டும்.

    கேமரா முன்பு நின்று கற்பனையாக பேசுவது போல் அரசியலிலும் கற்பனையாக பேசுவதை குஷ்பு நிறுத்திக் கொள்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×