search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கமிஷனருக்கு வைகோ கடிதம்
    X

    ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கமிஷனருக்கு வைகோ கடிதம்

    இலங்கை அரசுக்கு இதற்கு மேலும் கால நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என்றும், தமிழர்களின் பாதுகாப்பு ஆபத்துக்கு ஆளாகிவிடும் என்றும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கமிஷனருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
    சென்னை:

    ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கமிஷனர் ரவுத் அல் உசேனுக்கு நேற்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இ-மெயில் மூலம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ஜெனிவாவில் நடைபெற்ற 28-வது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான எண் 30/1-ன்படி, இலங்கை அரசு அப்பொழுது ஒப்புக்கொண்டபடி எதனையும் நிறைவேற்றாமல் நிராகரித்த நிலையில், இதுகுறித்து இலங்கை அரசுக்கு எந்தவித நீட்டிப்பும் தரக்கூடாது என வேண்டுகிறோம். 2015-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுவதுமாகச் செயல்படுத்துவதாக இலங்கை அரசு வாக்குறுதி அளிக்கும் விதத்தில் தானும் முன் மொழிந்தது. போதுமான கால அவகாசமும், நீட்டிப்பும் கொடுக்கப்பட்டும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட எந்தச் செயலையும் இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை.

    இலங்கை அரசுக்கு இதற்கு மேலும் கால நீட்டிப்பு கொடுத்தால் தமிழர்களின் பாதுகாப்பு ஆபத்துக்கு ஆளாவதோடு அதிகளவில் மனித உரிமைகள் நசுக்கப்படும் அபாயமும் உள்ளது.

    2015 மார்ச் மாதம் மனித உரிமைக் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களுக்கு ஓரளவு நம்பிக்கையைத் தந்தது. ஆனால், தமிழர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வண்ணம் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அமைந்தன. ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராகவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.


    அனைத்துலக சமுதாயத்தின் கண்களில் மண்ணைத் தூவி ஏமாற்றும் விதத்தில் இதனைச் செய்து கொண்டே, 2009 முள்ளிவாய்க்காலில் மட்டும் 6 மாதத்தில் 70 ஆயிரம் தமிழர் கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வினுடைய ஆய்வறிக்கை கூறிய போதும், இந்த இனக்கொலைக் குற்றத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தில் இலங்கை அரசு கால நீட்டிப்பு கோருகிறது.

    மனித உரிமைக் கவுன்சிலை வடகொரியா உதாசீனம் செய்ததால், அந்நாடு நடத்திய கொலைக் குற்றங்கள் குறித்து ஐ.நா.வின் பொதுச் சபை கவனத்தில் எடுத்துக்கொண்டு, ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக்கு பிரச்சினையைக் கொண்டு செல்லவும், அதன்படி அகில உலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு வடகொரியா பிரச்சினையை அனுப்புவதற் கான திட்டம் தற்போது பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கிறது. இதே அணுகுமுறையை இலங்கைப் பிரச்சினையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் பின்பற்ற வேண்டுகிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் வைகோ கூறியுள்ளார். 
    Next Story
    ×