search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது
    X

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது, நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
    சென்னை:

    சட்டசபையில் நாளை (16-ந்தேதி) நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

    கடந்த 8-ந்தேதியன்று தமிழக சட்டசபை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு சட்டசபையின் அடுத்த கூட்டத்தை 16-ந்தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று காலை 10.30 மணிக்கு 2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மார்ச் 16-ந்தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும் என்றும், 2017-18-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளை மார்ச் 23-ந்தேதியன்று சட்டசபைக்கு அளிக்கவேண்டும் என்றும் கவர்னர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, 2016-17-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையை மார்ச் 23-ந்தேதியன்று பேரவைக்கு அளிக்கவேண்டும் என்றும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. அப்போது நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்வார்.

    நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கம் ஆகியவை குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். மேலும், வரிகளை உயர்த்தும் பட்ஜெட்டாக இது இருக்குமா? அல்லது வரியில்லாத பட்ஜெட்டாக இருக்குமா? என்றும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நாளைக்கு கூட இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் அரசியல் பரபரப்பு மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சபாநாயகர் ப.தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வரவேண்டும் என்று சட்டசபை செயலகத்தில் தி.மு.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    எனவே, நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக சபாநாயகர் ப.தனபால், தன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு வாக்களிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு குறைந்தபட்சம் 35 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கவேண்டும். தி.மு.க.வுக்கு ஏற்கனவே அதைவிட அதிக எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சட்டசபையில் விவாதத்துக்கு எடுக்கவேண்டும் என்று வாக்களிக்கப்படும்.

    அதைத் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால், அந்த நம்பிக்கை இல்லாத தீர்மானம் எடுக்கப்படும் தேதியை (16-ந்தேதியில் இருந்து ஒரு வாரத்துக்குள் அந்தத் தேதி இருக்க வேண்டும்), அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யலாம் என்று அறிவிப்பார். அல்லது, ஒரு தேதியை சட்டசபையிலேயே அவர் அறிவிப்பார்.

    பின்னர் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமாரை பட்ஜெட் தாக்கல் செய்யும்படி அழைப்பார். அதன் பின்னரே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உரையுடன் அன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும்.

    இந்த கூட்டத்தில், சட்டசபை எத்தனை நாட்கள் நடத்தப்படவேண்டும்? பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் நடத்தும் விவாதம் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும்? அந்த விவாதத்துக்கு நிதித்துறை அமைச்சர் என்றைக்கு பதிலளிக்க வேண்டும்? துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட வேண்டும்? ஆகியவை உள்பட பல்வேறு அலுவல்கள் பற்றி முடிவு செய்யப்படும். அதுபற்றி சபாநாயகர் ப.தனபால் நாளைக்கு அறிவிப்பு வெளியிடுவார்.

    இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தொடர் தாக்குதல், துப்பாக்கி சூடு, நீட் தேர்வு, வறட்சி நிவாரணம், குடிநீர் பற்றாக்குறை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை போன்றவை பெரும் பிரச்சினைகளாக எதிர்க்கட்சியான தி.மு.க.வால் எழுப்பப்படும்.

    ஆளும் கட்சியுடன் காரசாரமான மோதல்களை சட்டசபையில் இந்த கூட்டத்தொடரில் எதிர்பார்க்கலாம். தற்போது ஆளும் கட்சியான அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் தனித்து செயல்படுவார்கள். 
    Next Story
    ×