என் மலர்
செய்திகள்

மதுவை குறைத்து ஊற்றியதால் மோதல்: தொழிலாளி படுகொலை
தாம்பரம்:
குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம், மகேஷ்வரி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53). தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி வெங்கடேசனும் நண்பர்கள்.
நேற்று இரவு இருவரும் மது அருந்த அதே பகுதியான திருமலைநகரில் உள்ள மதுக்கடைக்கு சென்றனர். மது பாட்டிலை வாங்கிவிட்டு அருகில் மறைவான இடத்தில் மது குடித்தனர்.
அப்போது வெங்கடேசனுக்கு குறைந்த அளவு மது ஊற்றியதாக தெரிகிறது. இதில் நண்பர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் சரமாரியாக சுப்பிரமணியை தாக்கி கீழே தள்ளினார். மேலும் அருகில் கிடந்த பெரிய கல்லை அவரது தலையில் போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்து பயந்து போன வெங்கடேசன் தப்பி ஓடி விட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சிட்லப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை வெங்கடேசனை போலீசார் கைதுசெய்தனர்.
நேற்று இரவு நடந்த மோதலில் அவருக்கும் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.






