என் மலர்
செய்திகள்

ஈரோடு-சென்னிமலை ரோட்டில் குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலவி வருகிறது. இதுபோதாது என்று குடிநீர் தட்டுப்பாடும் ஆங்காங்கே தலைவிரிக்க தொடங்கி விட்டது.
பருவமழை பொய்த்ததால் பவானிசாகர் அணை வறண்டு காணப்படுகிறது. குடிநீர் வசதி கேட்டு மக்கள் சாலை மறியல் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
இன்று காலை ஈரோடு, காசிபாளையம், விவேகானந்தர் நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் ஈரோடு-சென்னிமலை ரோட்டில் குடிநீர் வசதி கேட்டு திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:-
நாங்கள் காசிபாளையம், விவேகானந்தர் நகரில் 200 குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக எங்கள் பகுதிமக்களுக்கு சரியாக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை.
மேலும் ஆழ்குழாய் தண்ணீரும் இல்லை. எங்களுக்கு 5 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. அது போதுமானதாக இல்லை. எனவே எங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் அவர்களிடம் ‘‘உங்கள் பகுதியில் முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று பெண்கள் சாலைமறியலை கை விட்டனர். 30 நிமிடம் நடந்த இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது.






