என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் அருகே விபத்து: கணவர் கண் எதிரே மனைவி பலி
    X

    சத்தியமங்கலம் அருகே விபத்து: கணவர் கண் எதிரே மனைவி பலி

    சத்தியமங்கலம் அருகே கணவர் கண்முன் விபத்தில் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆலத்து கோம்பை பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 35). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி பெயர் கோகிலா (29). மகன் கவுதம் (8). இவர்கள் 3 பேரும் பழனி கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றனர். காரை தனசேகரன் ஓட்டிச் சென்றார்.

    கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

    சத்தியமங்கலம் அருகே அத்தாணி சாலையில் வந்த போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே ரோட்டோரம் ஒரு டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென நிலை தடுமாறி ரோட்டோரம் நின்ற லாரி மீது மோதியது.

    இதில் கோகிலா கணவர் கண் எதிரே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் தனசேகரன் அவரது மகன் கவுதம் ஆகிய 2 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்தனர். காருக்குள் இருந்தபடி இறந்து கிடந்த கோகிலா உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் கண்முன் விபத்தில் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×