என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை ஏற்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
    X

    விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை ஏற்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

    விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 106 பக்க கோரிக்கை மனுவை அளித்தார்.

    நேற்று மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தார்.

    டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 27-ந்தேதி பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தோம். சில மத்திய மந்திரிகளையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடப்பதற்கு உரிய அனுமதி வழங்க உதவியதற்கு பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம்.


    வறட்சி நிவாரண நிதி, வார்தா புயல் நிவாரண நிதி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய கோரி உள்ளோம்.

    மேலும் நீட் தேர்வு, அத்திகடவு- அவினாசி திட்டம், காவிரி பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை போன்றவை பற்றியும், கூடங்குளம் அனுமின் நிலையத்தில் 3, 4-வது அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் 2000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளோம்.

    ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஆலோசனை இன்றியும், மாநில அரசின் ஒப்புதலின்றியும் செயல்படுத்த கூடாது என்று பிரதமரிடம் கோரினோம்.


    பிரதமர் மோடி கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு பரிசீலித்து உரிய ஆவண செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளார். அப்போது அவரிடம் நிருபர்கள், ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்துக்கு எதிராக நடக்கும் நெடுவாசல் போராட்டம் குறித்து கேள்வி கேட்டனர்.

    அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறுகையில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு தமிழக அரசு, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் ஏற்காது” என்றார்.

    Next Story
    ×