என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறையில் பெண் மர்ம மரணம்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சபரி நகரை சேர்ந்தவர் குமரன் (வயது 36). செம்பனார்கோவில் குமரன்கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகள் விஜயலட்சுமி (31). இருவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் குமரன், நகை-பணம் கேட்டு விஜயலட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று விஜயலட்சுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், அவருக்கு சிகிச்சை அளிக்க குமரன் மற்றும் அவரது உறவினர்கள் கும்பகோணத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விஜயலட்சுமியின் தந்தை கண்ணன், செல்போனில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து கேட்டபோது விஜயலட்சுமி இறந்து விட்டதாகவும், மயிலாடுதுறைக்கு வந்து கொண்டு இருப்பதாகவும் குமரனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கண்ணன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது மகள் விஜயலட்சுமியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார், விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






