search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்கு தொடர்ந்து தண்ணீர் திறப்பு
    X

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்கு தொடர்ந்து தண்ணீர் திறப்பு

    தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவை பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் உள்ள தண்ணீர் மூலம் நிறைவேற்றப்படுகிறது. பருவ மழை பொய்த்ததால் 4 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு குறைந்தது. மொத்தம் 1.5 டி.எம்.சி. நீர் மட்டும் இருப்பு உள்ளது. இதனை கொண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியாது.

    இதையடுத்து கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 9-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இந்த நீர் 21-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    ஆரம்பத்தில் 50 கனஅடி வீதம் பூண்டி ஏரிக்கு வந்தது. பின்னர் படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரிக்கப்பட்டது. தற்போது 343 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்டலேறு ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    தொடர்ந்து கிருஷ்ணா நீர் திறப்பால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் 24.65 அடி தண்ணீர் உள்ளது (மொத்த உயரம் 35 அடி) 797 மில்லியன் கனஅடி இருப்பு இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலம் 300 கனஅடியும், சென்னை மெட்ரோ போர்டுக்கு பேபி கால்வாயில் 25 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கண்டலேறு அணையிலும் தற்போது நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஆனாலும் சோம சீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் பாதிப்பு இல்லை. தொடர்ந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என்றார்.
    Next Story
    ×