search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி: தீர்ப்பு பற்றி தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
    X

    ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி: தீர்ப்பு பற்றி தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

    சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய இந்த தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்தார்.
    சென்னை:

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    “சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய இந்த தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி. ஊழல் ஒழிப்புதான் பா.ஜனதாவின் பிரதான நோக்கமாக இருந்து வருகிறது.

    ஊழல் ஒழிந்தால் தான் அரசியல் தூய்மையாகும். நல்ல அரசியல்வாதிகள் உருவாகுவார்கள். தேர்தல் நேர்மையாக நடைபெறும். மக்களுக்கு நல்லது நடக்கும். இப்போது கொடுக்கப்பட்ட தீர்ப்பு மக்களுக்கான தீர்ப்பு.

    தமிழ்நாடும், மக்களும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். பணத்தை கொண்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் சூழல் தற்போது இருந்து வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஊழல் கரையற்ற ஆட்சி நடத்தி வந்தார்.

    யாருடைய நட்பினால் ஊழல் ஏற்பட்டிருக்கிறது என்று அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இந்த தீர்ப்பு வருங்காலத்தில் அரசியல் வாதிகளுக்கு ஒரு நல்ல பாடம்.

    தமிழகத்தில் பா.ஜனதா கால்ஊன்ற முடியாத நிலைக்கு பணம்தான் காரணம். இந்த தீர்ப்பை மக்களில் ஒருவராக இருந்து நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    கவர்னர் பொறுமையாக இருக்கிறார் என்று சொன்ன கி.வீரமணி, திருமாவளவன், திருநாவுக்கரசு எல்லாம் எங்கே போவார்கள். ஆளுனர் காத்திருந்தது சரிதான் என்று இந்த தீர்ப்பினால் தெரியவந்துள்ளது.

    தமிழக பொறுப்பு கவர்னர் அனுபவம் வாய்ந்தவர். உள்துறை பொறுப்பில் வல்லுனர். அதனால் அவருக்கு தெரியும். வாரம் ஒருமுறை பதவி பிரமாணம் செய்ய முடியாது.

    இனிமேல் அரசியல் சட்டத் திட்டங்களுக்குட்பட்டு கவர்னர் முடிவெடுப்பார். நல்லவர்கள் நேர்மையானவர்கள் ஆட்சி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×