search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜாத்தி அம்மாளிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றவர் சிறையில் அடைப்பு
    X

    ராஜாத்தி அம்மாளிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றவர் சிறையில் அடைப்பு

    கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளிடம், துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை இன்று சிறையில் அடைத்தனர்.
    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள், ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி. காலனியில் வசித்து வருகிறார். கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி.யும் அதே வீட்டிலேயே உள்ளார்.

    நேற்று மாலையில் ராஜாத்தி அம்மாளும், அவரது அண்ணன் மகள் மலரும் வீட்டின் முதல் மாடியில் படுக்கை அறையில் அமர்ந்திருந்தனர். அப்போது மர்ம வாலிபர் திடீரென அந்த அறைக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இதனால் ராஜாத்தி அம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் இருக்கும் பணத்தை எடுங்கள், இல்லையென்றால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று அந்த வாலிபர் மிரட்ட தொடங்கினார். இதனை தொடர்ந்து கீழே போய் பணத்தை எடுத்து வருவதாக கூறி ராஜாத்தி அம்மாள் அறையை விட்டு வெளியில் வந்தார். அப்போது, மலரை மட்டும் அந்த வாலிபர் துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக் கொண்டார்.

    இந்த நிலையில் பதட்டத்துடன் கீழே சென்ற ராஜாத்தி அம்மாள் நடந்த சம்பவம் பற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கூறினார். அவர்கள் உடனடியாக மாடிக்கு சென்று துப்பாக்கி காட்டி மிரட்டிய வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் துணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றார். அவரது பெயர் ராஜேந்திர பிரசாத். திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

    அப்போது அவர் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. ஆன்-லைன் நிறுவனம் ஒன்றில் ரூ.1500 கொடுத்து அந்த துப்பாக்கியை வாங்கியதாக ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.

    படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் நான் வசதியான வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டேன். இதன்படியே கனிமொழியின் வீடு என்று தெரியாமலேயே அவரது வீட்டிற்குள் புகுந்து விட்டேன் என்று கூறினார்.

    விசாரணைக்கு பின்னர் ராஜேந்திர பிரசாத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை இன்று சிறையில் அடைத்தனர். கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் மகள் கனிமொழி ஆகியோர் வசித்து வந்த வீட்டில் துப்பாக்கியை காட்டி வாலிபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×