search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
    X

    காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க எங்களை கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
    சென்னை:

    காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க எங்களை கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் சொகுசு விடுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறாரே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பது தான் ஜனநாயக மாண்பு, மரபு. இதை காலம் தாழ்த்துவது எந்த விதத்திலும் நியாயம் அல்ல. வரலாற்றில் இந்த சம்பவம் ஜனநாயகத்தின் கருப்பு நாள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கறைபடியாத நிலை ஏற்பட்டுவிடும். கவர்னர் காலம் தாழ்த்தாமல் எங்களை ஆட்சி அமைக்க அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு. காலம் தாழ்த்துவது ஜனநாயகத்துக்கு பேராபத்து.

    கேள்வி:- 3-வது நாளாக சசிகலா எம்.எல்.ஏ.க்களை சந்தித்துள்ளார். இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக ஒரே கருத்துடன் இருக்கிறார்கள். அம்மா (ஜெயலலிதா) அரசு அமைய வேண்டும். அந்த கருத்தைதான் சசிகலா வலியுறுத்துகிறார். அது கண்டிப்பாக அமையும்.

    கேள்வி:- எவ்வளவு நாட்கள் எம்.எல்.ஏ.க்கள் இந்த சொகுசு விடுதியில் இருப்பார்கள்?

    பதில்:- எங்களுக்கு பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. அவர் ஆட்சி அமைக்க அழைக்கலாம். கவர்னர் ஜனநாயக மான்பை காப்பாற்றுவார்.

    கேள்வி:- உங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. கவர்னர் உங்களை அழைக்காவிட்டால் என்ன அழுத்தம் கொடுப்பீர்கள்?

    பதில்:- கட்சியின் தலைமை தான் அதை முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் ஓ.எஸ். மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது “வானத்தை வில்லாக வளைக்கிறேன், நட்சத்திரங்களை எண்ணி சொல்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அது எப்படி அறிவுக்கு ஒத்துவராத வார்த்தையோ அதைபோல ஓ.பன்னீர்செல்வம் 7 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை காட்டுவேன் என்று சொல்கிறார் என்றார்.

    அவரிடம் நிருபர்கள் சொகுசு விடுதிக்குள் ஆம்புலன்ஸ் வந்ததாக கூறப்படுகிறதே எம்.எல்.ஏ.க்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் உங்கள் பேரன்புடன் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நன்றாக இருக்கிறார்கள் என்றார். 
    Next Story
    ×