search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடத்தை சந்தேகத்தில் ஆசிரியை குத்திக்கொலை
    X

    நடத்தை சந்தேகத்தில் ஆசிரியை குத்திக்கொலை

    சிவகிரி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு ஆசிரியர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து பேரூராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகிரி:

    நெல்லை மாவட்டம் சிவகிரி விஸ்வநாதபேரி பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது38). இவர் கல்லிடை குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் எலக்ட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி வீரலட்சுமி(33). இவர் அப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு சண்முகப்பிரியா(8) என்ற மகளும் கோபி(5) என்ற மகனும் உள்ளனர்.

    சுரேஷ்குமாரின் தந்தை முன்னாள் ராணுவ வீரர். அவர் மூலமாக சுரேஷ் குமாரும் ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் வேலையை விட்டு விட்டு ஊருக்கு வந்த அவர் கல்லிடைகுறிச்சி பேரூராட்சியில் பணிக்கு சேர்ந்தார். கல்லிடைகுறிச்சியில் வீடு எடுத்து தங்கி வேலை செய்து வருகிறார். சனி, ஞாயிறு விடுமுறையில் ஊருக்கு வருவது வழக்கம். வரும்போதெல்லாம் மனைவி வீரலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் இவர் விடுமுறையில் ஊருக்கு வந்தார். வந்த இடத்தில் கடந்த 2 நாட்களாக சுரேஷ்குமார் குடித்துவிட்டு வந்து வீரலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். நேற்று இரவு வீரலட்சுமி குழந்தைகளை தூங்க செய்துவிட்டு வீட்டில் இருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த சுரேஷ்குமார், வீரலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் உண்டானது.

    வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார் தேங்காய் எடுக்க பயன்படுத்தும் கத்தியால் வீரலட்சுமியை சரமாரியாக குத்தினார். இதில் வீரலட்சுமி கழுத்து, கைகளில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வீரலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தனர்.

    அப்போது வீரலட்சுமி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த கொலை குறித்து சிவகிரி போலீசுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீரலட்சுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வீரலட்சுமியின் தாய் பூமாரி சிவகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். கைதான சுரேஷ்குமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதில் அவர் “நான் விடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம் என்னிடம் வீரலட்சுமி சரியாக பேசுவதில்லை. இதனால் அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று இரவு எனது பேச்சை கேட்காமல் அவர் என்னிடம் தகராறு செய்தார். இதனால் வீரலட்சுமியை குத்தி கொலை செய்தேன்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் சிவகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×