search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பன்னீர்செல்வத்துக்கே எங்கள் ஆதரவு: ஜெயலலிதா பள்ளி தோழிகள் பேட்டி
    X

    பன்னீர்செல்வத்துக்கே எங்கள் ஆதரவு: ஜெயலலிதா பள்ளி தோழிகள் பேட்டி

    அ.தி.மு.க.வில் யார் முதல்-அமைச்சராக இருக்க வேண்டும் என்ற விவகாரத்தில் ஜெயலலிதாவின் பள்ளி தோழிகள் பலரும் ஓ.பன்னீர் செல்வத்துக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் யார் முதல்-அமைச்சராக இருக்க வேண்டும் என்ற விவகாரத்தில் ஜெயலலிதாவின் பள்ளி தோழிகள் பலரும் ஓ.பன்னீர் செல்வத்துக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    ஜெயலலிதாவுடன் சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் படித்த ஸ்ரீமதி அய்யங்கார் கூறியதாவது:-

    நான் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்து வந்தேன். 1980-ம் ஆண்டுகள் மத்தி வரை அவர் என்னுடன் நெருக்கமாக இருந்தார். அடிக்கடி போனில் பேசி கொள்வோம்.

    ஆனால், பின்னர் அவருடைய வீட்டில் இருந்தவர்களால் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு எங்களுக்குள் இருந்த தொடர்பும் குறைந்தது.

    ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை இப்படி சென்று விடும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. அவர் தனது அரசியல் வாரிசு யார் என்பதை முடிவு செய்து இருக்க வேண்டும். பன்னீர் செல்வம் போன்றவர்களை அவர் தனது மனதில் தேர்வு செய்து வைத்திருப்பார் என நினைக்கிறேன். சசிகலாவா? பன்னீர் செல்வமா? என்று பார்த்தால் நான் பன்னீர் செல்வத்துக்கு தான் ஆதரவு தெரிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு தோழி சாந்தினி பங்கஜ் கூறியதாவது:-

    நான் தற்போது பெங்களூரில் வசிக்கிறேன். டிராவல் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறேன். எனக்கு குழந்தைகள் பிறந்த போது, 3 தடவை ஜெயலலிதா என்னை ஆஸ்பத்திரியில் வந்து பார்த்தார். அவரது வீட்டுக்கு நாங்கள் குடும்பத்துடன் சென்று சாப்பிட்டு இருக்கிறோம்.

    2005-ம் ஆண்டு கடைசியாக அவர் வீட்டுக்கு நான் சென்றேன். ஜெயலலிதாவின் பயண ஏற்பாடுகளை கூட எங்கள் நிறுவனம் மூலம் செய்ய ஏற்பாடு நடந்தது. ஆனால், சசிகலா அதை தடுத்து விட்டார்.

    அதன் பிறகு எங்களுக்கு ஜெயலலிதாவுடன் உள்ள தொடர்பும் துண்டிக்கப்பட்டது. எனது மகன் திருமணத்துக்கு அழைப்பு கொடுப்பதற்காக ஜெயலலிதாவை சந்திக்க முயன்றோம். அப்போது பன்னீர் செல்வம் மூலம் தொடர்பு கொண்டோம்.

    ஜெயலலிதா சந்திக்க அனுமதி கொடுத்து இருந்தார். ஆனால், சசிகலாவின் ஆட்கள் அதை தடுத்து நிறுத்தி விட்டார்கள். பன்னீர் செல்வம் ஒரு சிறப்பான மனிதர். அவர் ஜெயலலிதாவின் நம்பிக்கையான நபராக இருந்தார்.

    சசிகலாவை பொறுத்த வரை எப்போதும் ஒரு அச்சுறுத்தல் நபராகவே இருந்து வந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயலலிதாவின் மற்றொரு பள்ளி தோழியான பதர் சயீத் பன்னீர் செல்வத்தை நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, ஜெயலலிதாவுக்கு பன்னீர் செல்வம் மிக நம்பிக்கையானவராக இருந்தார். நானும் பன்னீர் செல்வத்தை முழுமையாக நம்புகிறேன் என்று கூறினார்.
    Next Story
    ×