search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டை அருகே சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து
    X

    ராணிப்பேட்டை அருகே சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

    ராணிப்பேட்டை அருகே ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான மதிப்பில் வேதிப்பொருட்கள் எரிந்து நாசமாயின.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் சிப்காட் இயங்கி வருகிறது. இங்கு பேஸ்-3யில் குஜராத்தை தலைமையிடமாக கொண்ட என்விரான் மென்டல் மேனுபேக்சரிங் என்ற பெயரில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இங்கு தேவையற்ற பொருட்கள் மறுசுழற்சி முறையில் வேதிபொருட்களாக மாற்றப்படுகின்றன. அந்த வேதிபொருட்கள் சிமெண்ட் தயாரிப்பு கம்பெனிகளில் பயன்படுத்தப்படுகிறது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் தொழிற்சாலை மூடப்பட்டிந்தது. 2 காவலாளிகள் மட்டும் பணியில் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலையில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்துவிட்டு எரிந்த தீ தொழிற்சாலையின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.

    இதனால் தொழிற்சாலை முழுவதும் தீப்பிழம்பாக காட்சி அளித்தது. அங்கிருந்து அதிக அளவில் புகை மூட்டம் எழுந்தது. தொழிற்சாலை தீப்பிடித்து எரிவதை கண்ட காவலாளிகளும், அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பாக தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிப்காட், பெல், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலைக்கு விரைந்து வந்தனர்.




    மாவட்ட தீணைப்பு துறை அதிகாரி முருகேசன் தலைமையில் மொத்தம் 6 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். தீ அதிக அளவில் கொளுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க கடும் போராட்டமாக இருந்தது.

    கூடுதலாக மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வர வழைக்கப்பட்டு தீணை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்குள் வேதிப்பொருட்கள் பேரல் அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது.

    எனவே அந்த பேரல்கள் ஒன்றுவிட்டு ஒன்றாக எரிந்து கொண்டு இருக்கிறது. அதிக ஜூவாலையுடன் தீ எரிவதால் புகை மண்டலம் அதிகரித்து நெல்லிக்குப்பம் பகுதி முழுவதும் பரவி உள்ளது.

    தீப்பிடித்து எரிவது வேதிப்பொருட்கள் என்பதால் அதன் தாக்கம் புகை மண்டலத்தோடு சேர்ந்து அந்த பகுதியில் பரவியுள்ளது. அந்த வாடையை நுகர்ந்து கொண்டு சுவாசிக்க முடியாத நிலை அந்த பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு ஏற்பட்டது.

    தொழிற்சாலையின் அருகே கொஞ்ச நேரம் கூட நிற்க முடியவில்லை. முச்சுத்திணறல் ஏற்படுகிறது. இது தீயை அணைக்கும் பணிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. எனினும் தீயணைப்பு வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு தீயை அணைத்து வருகிறார்கள்.

    தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பில் வேதிப்பொருட்கள் மற்றும் தயாரிப்பு எந்திரங்கள் எரிந்து நாசமானது.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ராணிப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், வாலாஜா தாசில்தார் பிரியா, ஆர்.டி.ஓ. முருகேசன் ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் தீ விபத்தை பார்வையிட்டு தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தினர். இந்த தீ விபத்து ராணிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×