search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதித்துறையின் எதிர்காலம், சட்டம் படித்த பெண்களின் கையில் தான் உள்ளது: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேச்சு
    X

    நீதித்துறையின் எதிர்காலம், சட்டம் படித்த பெண்களின் கையில் தான் உள்ளது: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேச்சு

    இந்திய நீதித்துறையின் எதிர்காலம் சட்டம் படித்த பெண்களின் கைகளில் தான் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப் கூறினார்.
    சென்னை:

    ‘தி மெட்ராஸ் பார் அசோசியேஷன்’ என்ற வக்கீல்கள் சங்கமும், மூத்த வக்கீல் என்.நடராஜன் அறக்கட்டளையும் இணைந்து சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையே மாதிரி நீதிமன்ற போட்டியை நடத்தியது.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமை தாங்கினார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி உள்ளிட்ட அரசு வக்கீல்கள், வக்கீல்கள், பல்வேறு சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ‘தி மெட்ராஸ் பார் அசோசியேஷனின்’ தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் வரவேற்றார். செயலாளர் எஸ்.ஹேமலதா நன்றியுரை ஆற்றினார்.

    இந்த மாதிரி நீதிமன்றம் போட்டியில், தஞ்சை சாஸ்திரா சட்டக்கல்லூரி மாணவர்கள் சூர்யாதேஜா, கே.சிவா, சுவேதா ஆகியோர் கொண்ட அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் சீர்மிகு சட்டக்கல்லூரி மாணவிகள் வி.பகவதி, ஜி.எஸ்.சிம்மாஞ்சனா, சுவாதி ஆகியோர் கொண்ட அணி இரண்டாவது பரிசை பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக வாதம் செய்ததாக சீர்மிகு சட்டக்கல்லூரி மாணவி வி.பகவதிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப் பேசியதாவது:-

    தற்போது பெரிய தனியார் நிறுவனங்கள் எல்லாம் எம்.பி.ஏ., என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பதில், சட்டம் படித்தவர்களைத்தான் முக்கிய பதவிகளுக்கு அதிக அளவில் தேர்வு செய்கின்றது. ஏன் என்றால், இந்த சட்டப்படிப்புக்கு என்று தனி உழைப்பும், சிறப்பும் உள்ளது. எனவே, சட்டம் படித்தவர்கள், குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் முன்னேற தனியார் நிறுவனங்களுக்கு போவதா? அல்லது சமுதாயத்துக்காக நீதிமன்றங்களுக்கு வருவதா? என்பதை முடிவு செய்யவேண்டும். எந்த படிப்புக்கும் இல்லாத மரியாதை சட்டப்படிப்புக்கு உள்ளது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

    அதே நேரம், அண்மை காலங்களில் சட்டப்படிப்புகளில் பெண்கள் அதிகம் சேர்கின்றனர். இவர்கள் மாவட்ட நீதிபதிகள் பணியிடத்துக்கான போட்டி தேர்வுகளில் அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர்.

    அதனால் சில ஆண்டுகளில் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிகளுக்கு பெண்கள் அதிகம் பேர் வருவார்கள். இந்த முறையில் தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு, தமிழகத்தை சேர்ந்த திறமையான நீதிபதி ஆர்.பானுமதி கிடைத்துள்ளார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இந்திய நீதித்துறையின் எதிர்காலம் சட்டம் படித்த பெண்களின் கைகளில் தான் உள்ளது.

    இவ்வாறு நீதிபதி குரியன் ஜோசப் பேசினார்.

    முன்னதாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பேசியதாவது:-

    நாங்கள் படிக்கின்ற காலங்களில் சட்ட மாணவர்களுக்கு இதுபோல மாதிரி நீதிமன்ற போட்டிகள் பெரிய அளவில் நடத்தப்படவில்லை. அண்மை காலங்களில் அதிக அளவில் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுவதால், சட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பே, மாணவர்களுக்கு ஏராளமான அனுபவங்கள் கிடைத்து விடுகின்றன.

    தமிழகத்தை பொறுத்தவரை இதுபோன்ற மாதிரி நீதிமன்ற போட்டிகள் பல நடக்கின்றன. தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் முதல் இடங்களை பெறுகின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தமிழக நீதித்துறைக்கு திறமையான வக்கீல்கள் ஏராளமானோர் விரைவில் கிடைப்பார்கள்.

    இளம் வக்கீல்கள் தங்களது நேரத்தை நல்ல வழிகளில் செலவு செய்யவேண்டும். வேலை இல்லாத நேரங்களில் தயங்காமல் நீதிமன்றங்களுக்கு வரவேண்டும். அங்கு அமர்ந்து, வழக்கு விசாரணைகளை கவனிக்க வேண்டும். மூத்த வக்கீல்கள் எப்படி வாதிடுகின்றனர்? நீதிபதிகள் எப்படி வழக்குகளை விசாரிக்கின்றனர்? என்பதை கவனிக்க வேண்டும். இதன்மூலம் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்.

    பக்கம் பக்கமாக மனுக்களை தாக்கல் செய்து தேவையில்லாமல் மணி கணக்கில் வாதம் செய்யக்கூடாது. வக்கீல்கள் தங்களது வாதங்களை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

    Next Story
    ×