search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெற் பயிர் தண்ணீரில் மூழ்கியதால்  விவசாயி மயங்கி விழுந்து பலி
    X

    நெற் பயிர் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயி மயங்கி விழுந்து பலி

    பெண்ணாடம் அருகே நெற் பயிர் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயி மயங்கி விழுந்து பலியானார். இவரது உடலை பார்த்து மனைவி , குழந்தைகள் கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. மழை நீர் வயலில் தேங்கி பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் மனம் உடைந்து பலியாவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    காட்டு மன்னார் கோவிலில் சுந்தரகண்ணு என்ற விவசாயி மழையில் உளுந்து பயிர் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். சேத்தியா தோப்பில் காசிநாதன் என்ற விவசாயி நெற்பயிர்கள் சேதம் அடைந்ததை பார்த்து அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்

    இந்த நிலையில் பெண்ணாடம் அருகே மேலும் ஒரு விவசாயி மயங்கி விழுந்து இறந்துள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பெண்ணாடம் அருக உள்ள வடகரையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45). விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் பயிரிட்டிருந்தார். இதற்காக கூட்டுறவு சங்கத்தில் ரூ. 33 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். நெற் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெண்ணாடம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ராஜேந்திரனின் வயலில் தண்ணீர் தேங்கியது. நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து சேதம் அடைந்தன.

    இன்று காலை வயலுக்கு வந்த ராஜேந்திரன் நெற்பயிர்கள்சாய்ந்த கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நெல் அறுவடைசெய்ய முடிமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதே. விவசாயத்துக்காக வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்துவேன் என்று கண்ணீர் சிந்தினார். சிறிது நேரத்தில் அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். ராஜேந்திரனை மீட்டு பெண்ணாடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர்.

    இறந்த ராஜேந்திரனுக்கு திலகவதி என்ற மனைவியும் பிரியா (20), பிரியங்கா (18), பிரியதர்‌ஷனி (14) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜேந்திரன்உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகள்கள் கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

    Next Story
    ×