search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளியில் மாணவன் மர்ம மரணம்: உறவினர்கள் சாலை மறியல்
    X

    பள்ளியில் மாணவன் மர்ம மரணம்: உறவினர்கள் சாலை மறியல்

    அறந்தாங்கி அருகே பள்ளியில் மாணவன் மர்மமான முறையில் இறந்தான். இது குறித்து நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆவுடையார்கோவில்:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 12). இவன் பிள்ளைவயலில் உள்ள டாக்டர்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை வழக்கம்போல் மணிகண்டன் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றான்.

    இந்நிலையில் மதியம் மணிகண்டன் பள்ளி வகுப்பறைக்குள் வாயில் ரத்தம் வழிந்தபடி மயங்கி கிடந்தான். இதைக்கண்ட ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் மாணவன் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவன் உடலை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து மணிகண்டனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையறிந்த மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மணிகண்டனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் மாணவன் மணிகண்டனின் சாவில் மர்மம் உள்ளது என்றும், இதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, மாணவனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன், தாசில்தார் பரணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மணிகண்டன் சாவு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

    இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி மாணவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×