search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

    தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    பருவ மழை காலங்களில் சரியாக கைகொடுக்காத மழை கடந்த 2 நாட்களாக தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக பெய்து வருகிறது. பெரியாறு மற்றும் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்து வந்த பெரியாறு அணையின் நீர் மட்டம் சற்றே உயர்ந்து இன்று காலை 110.80 அடியாக உள்ளது. அணைக்கு 836 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைக்கு 63 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 25.39 அடியாக உள்ளது. அணையில் இருந்து 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு நீர் மட்டம் 34.10 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 60.84 அடி. வரத்து 54 கன அடி. திறப்பு 3 கன அடி.

    இதே போல திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை அளவு விபரம் வருமாறு:-

    திண்டுக்கல் 12.32, கொடைக்கானல் 13.80, நத்தம் 14, பழனி 8, வேடசந்தூர் 14.30, சத்திரப்பட்டி 4.10, வேடசந்தூர் புகையிலை மையம் 17.50, கொடைக்கானல் போர்ட் கிளப் 15.50, காமாட்சிபுரம் 8.70, தேக்கடி 4.6, வைகை அணை 4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மட்டும் 108.22 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×