என் மலர்
செய்திகள்

கொடைக்கானலில் கடும் பனி மூட்டம்: விளக்குகளை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் வருடம் முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவி வரும். இதனை அனுபவிக்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.
கடந்த 4 ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. மலைப்பகுதி முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. மழை காலத்திலேயே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு சாரல் மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து பெய்திருந்தால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி இருக்கும்.
மழை இல்லாமலும் தற்போது கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
வந்திருந்த சிலரும் அறைகளிலேயே முடங்கியுள்ளனர். காலை 11 மணி வரை பனிமூட்டம் உள்ளதால் எதிரே வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லுகின்றனர்.
மேலும் மாலை 3 மணிக்கே இருள் சூழந்து குளிர் அடிக்க தொடங்குகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
சுற்றுலா இடங்களான மோயர்பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, ஏரி போன்றவை இடங்களில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பிப்ரவரி மாத இறுதியில் சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.