search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி குறுக்கே தடுப்பணைகள்: தமிழக அரசு இனியும் உறங்க கூடாது - அன்புமணி ராமதாஸ்
    X

    பவானி குறுக்கே தடுப்பணைகள்: தமிழக அரசு இனியும் உறங்க கூடாது - அன்புமணி ராமதாஸ்

    பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கேரள அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உருவாகி கேரளம் வழியாக பாய்ந்து மீண்டும் தமிழகத்திற்கு வரும் பவானி ஆற்றின் குறுக்கே, அட்டப்பாடி பள்ளத்தாக்குப் பகுதியில் ஆறு தடுப்பணைகளை கட்ட கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான பவானி நீலகிரி மாவட்டத்தின் குந்தா மலைப் பகுதியில் உருவாகி முக்காலி வழியாக கேரளத்திற்குள் சென்று அட்டப்பாடி பள்ளத்தாக்கை வளப்படுத்திய பின்னர் அத்திக்கடவு வழியாக மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது.

    கேரளத்தில் ஒட்டுமொத்தமாக 22 கி.மீ. தொலைவு மட்டுமே பாய்கிறது. அதிலும் பெரும்பாலான பகுதி வனப்பகுதியாகும். அப்பகுதியில் மொத்தம் ஆறு இடங்களில் தடுப்பணைகளை கட்ட கேரள அரசு தீர்மானித்துள்ளது.

    அதில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் 2 தடுப்பணைகளை கட்டும் பணிகள் கடந்த இரு வாரங்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பவானி ஆற்றில் தண்ணீர் ஓடாததை பயன்படுத்திக்கொண்டு ராட்சத எந்திரங்களின் உதவியுடன் இப்பணிகள் நடந்து வருகின்றன.

    அதுமட்டுமின்றி, சாலையூர், சீரக்கடவு, பாடவயல், சாவடியூர் ஆகிய இடங்களில் மேலும் நான்கு தடுப்பணைகளை கட்டுவதற்கான பணிகளும் அடுத்த சில நாட்களில் தொடங்கும் என்றும், ஒரு சில வாரங்களில் ஆறு தடுப்பணைகளையும் கட்டி முடிக்க கேரள அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

    இந்த ஆறு தடுப்பணைகளும் கட்டப்பட்டால் பவானியில் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது முற்றிலுமாக நின்று விடும். கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையிலிருந்து தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    அதுமட்டுமின்றி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசன ஆதாரமாக பவானி ஆறு தான் திகழ்கிறது. பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டால் கோவை மற்றும் திருப்பூரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்; வேளாண்மையும் பாதிக்கப்படும்.

    பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் வி‌ஷயத்தில் லட்சிய அணுகுமுறையை தமிழக அரசு தொடர்ந்தால், கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் குடிநீர், பாசன ஆதாரங்கள் பறி போவதை தடுக்க முடியாது.

    எனவே, தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கேரள அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×