search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா உடல்நிலை குறித்து மறைக்க வேண்டிய அவசியமில்லை: சி.ஆர். சரஸ்வதி சொல்கிறார்
    X

    ஜெயலலிதா உடல்நிலை குறித்து மறைக்க வேண்டிய அவசியமில்லை: சி.ஆர். சரஸ்வதி சொல்கிறார்

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து மறைக்க வேண்டிய அவசியமில்லை என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறி உள்ளார்.
    சென்னை:

    முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டும் இன்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பியது.

    விசாரணையின் போது ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களுக்குள் போக நாங்கள் (நீதிபதிகள்) விரும்பவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்காக அடிப்படை உரிமையை அரசியல் சட்டம் வழங்கி பாதுகாக்கிறது. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரியவேண்டும். ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது என்று யார் வேண்டுமானாலும் சந்தேகப்படலாம். அதுகுறித்து அவர்கள் கேள்வி கேட்கலாம் என்றது ஐகோர்ட்டு.

    ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது எந்த தகவலும் சொல்லவில்லை. இப்போது இறந்த பின்னரும் எந்த உண்மையையும் வெளியில் சொல்லவில்லை. அப்படி என்றால், பிணத்தை தோண்டி எடுத்து சோதித்தால் தான் உண்மை வெளியில் வருமா? என்றும் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

    இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 9-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்கில் எதிர் மனுதாரர்களான இந்திய பிரதமர் அலுவலகம், பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை செயலாளர், மத்திய சட்டம் அமைச்சகம், சி.பி.ஐ. இயக்குனர், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்கள்.

    இவ்விவகாரம் தொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி செய்தி சேனலுக்கு அளித்து உள்ள பேட்டியில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு உடல்நலக்குறைவு திடீரென ஏற்பட்டது. அவரது உடல்நிலைக் குறித்து மறைப்பதற்கு ஒன்றும் கிடையாது. இது தொண்டர்களுக்கு மனவேதனையை அளித்து உள்ளது, என்று கூறி உள்ளார்.
    Next Story
    ×