search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவர் விடுதலையானதால் சசிகலா புஷ்பா வழக்கு முடித்து வைப்பு
    X

    கணவர் விடுதலையானதால் சசிகலா புஷ்பா வழக்கு முடித்து வைப்பு

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக கைதான லிங்கேஸ்வரன் திலகம் விடுதலையானதால் சசிகலா புஷ்பாவின் வழக்கை விடுமுறை கால கோர்ட்டு நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் மகளிர் அணி செயலாளராக இருந்தவர் சசிகலா புஷ்பா. இவர் ராஜ்ய சபா எம்.பி.யாகவும் உள்ளார். தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவுடன் டெல்லி விமான நிலையத்தில் நடந்த மோதல் சம்பவத்தால், அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா புஷ்பாவை நீக்கி, மறைந்த முதல்அமைச்சரும், அ.தி.மு.க.வின் அப்போதைய பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா இன்று காலையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை இப்பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என்று சசிகலா புஷ்பா, சென்னை ஐகோர்ட்டில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் பெறுவதற்காக அக்கட்சியின் அலுவலகத்துக்கு சசிகலாபுஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் திலகம் உட்பட சிலர் நேற்று சென்றனர். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள், லிங்கேஸ்வரன் திலகம் மற்றும் அவரது ஆட்களை தாக்கினார்கள். இதில் லிங்கேஸ்வரன் திலகம் படுகாயமடைந்தார். அவரை அக்கும்பலிடம் இருந்து மீட்ட போலீசார், பின்னர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    இந்த நிலையில், நேற்று இரவு 10.15 மணிக்கு ஐகோர்ட்டு விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோரது வீட்டிற்கு சென்று, சசிகலா புஷ்பாவின் வக்கீல்கள் அவசர ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.

    அந்த வழக்கு சசிகலா புஷ்பா சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு மனுவில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு பெறுவதற்காக என் கணவர் லிங்கேஸ்வரன் திலகம் மற்றும் சிலர் அக்கட்சியின் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கிருந்த சிலர், என் கணவரையும் அவருடன் சென்றவர்களையும் கொடூரமாக தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த என் கணவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி போலீசார் அழைத்து சென்றனர். ஆனால், அதன்பின்னர் என் கணவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.(நேற்று) இரவு 9 மணி வரை அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. என் கணவரை போலீசார் எங்கோ அழைத்து சென்று சட்டவிரோதமாக பிடித்து வைத்துள்ளனர். இதுகுறித்து டி.ஜி.பி., போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்ட என் கணவரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸ் கமி‌ஷனருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை இன்று காலையில் ஐகோர்ட்டில் வைத்து விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், விடுமுறை கால கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள். அப்போது சசிகலா புஷ்பா சார்பில் மூத்த வக்கீல் பிரகாஷ் ஆஜராகி, ‘லிங்கேஸ்வரன் திலகத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரிய ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

    இந்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தபோது, தமிழக அரசு வக்கீல் ஆஜராகி, ‘லிங்கேஸ்வரன் திலகத்தை போலீசார் கைது நேற்று கைது செய்தனர். இன்று காலை 9.30 மணிக்கு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை வெளியில் விட்டால், ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அவரை போலீசார் பிடித்து வைத்திருந்தனர். தற்போது அவரை விடுவித்து விட்டதால், இந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×